இன்று புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு–சிலுவை பாதை
சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு, சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில், கிறிஸ்துவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.
லெந்து நாட்களின் கடைசி வெள்ளிக் கிழமையை, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அவர் மரித்த நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. சிலுவை பாதை பவனியும் நடைபெற்றது.
உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு மரித்த நாளை புனித வெள்ளி தினமாக அனுஷ்டிக்கிறார்கள். அவர் இறந்து மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார். இதனைதான் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.
40 நாட்கள் நோன்பு
இந்த விழாவுக்கு தயாராகும் முன்பு அவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாட்களில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயேசுவின் இறப்பை சித்தரிக்கும் சிலுவை பாடு நிகழ்ச்சி ஆலயங்களில் நடைபெறும். அவர் உயிர் நீத்த வெள்ளிக்கிழமையே புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது.
சிலுவைப்பாதை
இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, நற்கருணை வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
இதில், திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இயேசுவின் சிலுவை பாதை நிகழ்வுகள் தொடங்கியது.
சிலுவையில் அறைதல்
ஜெருசலேமில் இருந்து இயேசுவை கொல்கதா மலைக்கு அழைத்துச் சென்று அங்கு சிலுவையில் அவரை அறைந்து கொல்லுவதை நினைவூட்டும் வகையில் இந்த வழிபாடு நடக்கும். அதன் பிறகு ஆலயத்தின் பீட துணிகள் அகற்றப்படும்.
தவக்காலம் முடிவு
இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இன்று இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும். சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கும். மரித்த இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.