மேட்டூர்: வனப்பகுதியில் ஆயுதப்புதையல்... விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானதா?
மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் வனப்பகுதியில் துப்பாக்கி மற்றும் கையெறி வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை 2வது நாளாக தோண்டியெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூர் தும்பாரப்பட்டி வனப்பகுதியில் மரக்கன்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 50 ஏக்கர் பரப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
செவ்வாய்கிழமையன்று மாலையில், மரக்கன்று நடுவதற்காக பொக்லைன் மூலம் குழிகளை தோண்டினர். அப்போது ஒரு இடத்தில் குழி தோண்டியபோது, பழைய இரும்பு பேரல் கிடைத்தது. அதை உடைத்து பார்த்தபோது கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள், வெடி மருந்துகள், கைத்துப்பாக்கிகள் என பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், மாவட்ட எஸ்பி சக்திவேலுக்கு தகவல் கொடுத்தனர். உடனே கொளத்தூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று, தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுதக்குவியல்
அப்பகுதியில் மேலும் சில இடங்களில் தோண்டியபோது ஆயுதக்குவியல் காணப்பட்டது. இதையடுத்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், எஸ்பி சக்திவேல் மற்றும் கியூ பிராஞ்ச் அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.
துப்பாக்கி குண்டுகள்,
மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பேரலில் ‘எல்டிடி' என்று எழுதப்பட்டிருந்தது. அதில் 3 பாலித்தீன் கவர்களில் துப்பாக்கி உபகரணங்கள், குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தன. அதனை உடனடியாக அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர். இரவு முழுவதும் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கையெறி குண்டுகள்
கொளத்தூர் வருவாய்த்துறை ஆய்வாளர் திருமுருகன், கிராம நிர்வாக அலுவலர் சக்தி ஆகியோர் முன்னிலையில் போலீசார் இன்று காலை அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது முட்புதர் பகுதிகளில் கிடந்த 3 கையெறி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அவற்றை வருவாய்த்துறையினர் எடுத்துச்சென்றனர்.
எல்.டி.டி.ஈ ஆயுதப்பயிற்சி
ஆயுத புதையல் கிடைத்த பகுதியில் உள்ள ஒரு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் இருந்தது. கடந்த 1980களில் விடுதலைப்புலிகள் ஆயுதப்பயிற்சி பெற்று வந்தனர். எனவே, புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
வீரப்பன் கும்பல்
அதே சமயத்தில் உளவுத்துறை போலீசார் பல புதிய சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். சந்தன கடத்தல் வீரப்பன் கும்பலை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டபோது இப்பகுதியில் ஏற்கனவே பலமுறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் பயிற்சி பெற்ற இடம் என்பதால் அப்போதும் சந்தேகமான இடங்களில் தோண்டி பார்க்கப்பட்டது. அப்போது எந்த ஆயுதங்களும் சிக்கவில்லை.
கன்னிவெடி
அதன் பின்னர் தொடர்ச்சியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிரடிப்படை போலீசார் கட்டுப்பாட்டில்தான் வனப்பகுதி இருந்தது. மேலும் சந்தன கடத்தல் வீரப்பன் கும்பலும் நவீன துப்பாக்கி, கண்ணி வெடிகளை பயன்படுத்தி வந்தனர். எனவே, வீரப்பன் கும்பலை சேர்ந்தவர்கள்தான் பதுக்கி வைத்திருக்க வாய்ப்புள்ளது.
தமிழ் தீவிரவாத அமைப்பு
கடந்த 2000ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் தீவிரவாத அமைப்பினருக்கும் இந்த வனப்பகுதி புகலிடமாக மாறியது. அந்த சமயத்தில் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதாக தமிழ் தீவிரவாத அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர்.
பேரல்களில் ஆயுதங்கள்
மண்ணில் தோண்டி எடுக்கப்பட்ட இரும்பு பேரலில் பெரிய அளவில் சேதம் இல்லை. 25 ஆண்டுக்கு மேலாகியிருந்தால் கண்டிப்பாக துருப்பிடித்து மக்கி மண்ணோடு மண்ணாகியிருக்கும். ஆனால் சமீப சில ஆண்டுக்குள் புதைக்கப்பட்ட பேரல் போல் காணப்படுவதால் போலீசாருக்கும் குழப்பம் நீடிக்கிறது.
நக்லைட்டுகள் நடமாட்டம்
கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக வனப்பகுதி வழியாக நக்சலைட்கள் இந்த பகுதிக்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது. இவற்றை அவர்கள் பதுக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பதுக்கியது யார்
சேலம் எஸ்பி சக்திவேல் கூறியதாவது: மேட்டூர் வனப்பகுதியில் கிடைத்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவை எந்த வகை ஆயுதங்கள், யார் பயன்படுத்தினர் என்பதை உடனடியாக சொல்ல முடியாது என்றார்
தேடுதல் வேட்டை
இந்த பகுதியில் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்றதால், ஆயுதங்களை அவர்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வேறு எங்கும் ஆயுத தளவாடங்கள் உள்ளதா என்பது குறித்து தேடுதல் நடந்து வருகிறது என்றும் எஸ்பி சக்திவேல் கூறினார்.