மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் கட்டணங்கள் அறிவிப்பு – சீசன் டிக்கெட் கிடையாது!
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் சீக்கிரமாகவே முடிவடைந்துவிடும் எனவும், அதற்கான கட்டணங்களை நிர்ணயம் செய்யும் வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது.
இந்த மெட்ரோ ரயில் பணியானது 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டு இரவு, பகலாக நடைபெற்று வருகின்றது.
சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு, செயின்ட்தாமஸ் மவுண்ட் வழியாக மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள 10 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து ரூபாய் 15, ரூபாய் 20, ரூபாய் 25 என்று முழு தொகையாக டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
டோக்கன், ஸ்மார்ட் கார்டு என 2 வகையான டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்துக்கு சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் கிடையாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
டோக்கன் டிக்கெட் ஒரே ஒரு பயணத்துக்கு மட்டும் பயன்படும். டோக்கன் டிக்கெட் வாங்குபவர்கள் நுழைவு வாயிலில் இருக்கும் எந்திரத்தில் அந்த டிக்கெட்டை தேய்த்தால் தானியங்கி கதவு திறக்கும்.
உள்ளே சென்று ரயிலில் ஏறலாம். எந்த நிலையத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கி வெளியேறும் பாதையில் உள்ள எந்திரத்தில் டோக்கன் டிக்கெட்டை போட்டால் தானியங்கி வாயில் திறக்கும் வெளியே செல்லலாம்.
ஸ்மார்ட் கார்டை மொத்தமாக பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.இது மாதாந்திர பாஸ் போன்ற செயல்பாடு கொண்டதாகும்.