எம்.ஜி.ஆர் வீட்டையும் விடாத கன மழை!
சென்னை: சென்னையில் பெய்த கன மழைக்கு மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் வீடும் தப்பவில்லை. எம்.ஜி.ஆர். கடைசியாக வசித்து வந்த ராமாவரம் தோட்டத்தில் உள்ள மரங்கள் பல மழைக்கு விழுந்து விட்டன. மேலும் வாட்ச்மேன் அறையும் இடிந்து விழுந்துள்ளது.
மணப்பாக்கம் பகுதியில், ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். வசித்து வந்த வீடு உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி இந்த வீடு உள்ளது. ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். வீட்டு வளாகத்தில்தான் அவரது நினைவிடம், அவரது மனைவி ஜானகி நி்னைவிடம், தாயார் சத்யாவின் நினைவிடம் ஆகியவை உள்ளன.
இந்த வளாகத்தில் எம்.ஜி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களும் வசித்து வருகின்றன. இதுதவிர காதுகேளாதோர், வாய் பேச முடியாதோருக்கான பள்ளியும் இயங்கி வருகிறது. ஊழியர்களும் பலர் இங்கு உள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழையால் எம்.ஜி.ஆர். வீட்டு வளாகமும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்குள்ள பல மரங்கள் விழுந்து விட்டன. வாட்ச்மேன் அறை இடிந்து விட்டது. மேலும் வீட்டுக்கு அருகே அடையாறு ஓடுவதால் அதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு எம்.ஜி.ஆர். வீட்டு வளாகத்திற்குள்ளும் புகுந்து விட்டதாம்.
இந்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வரவில்லை என்று இங்குள்ள பணியாளர்கள் கூறுகிறார்கள்.