புரோக்கர் சுகேஷின் கூட்டாளி சென்னையில் கைது... இறுகும் இரட்டை இலை லஞ்ச வழக்கு!
இரட்டை இலை லஞ்ச விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளியாக ஹவாலா ஏஜென்ட் ஜெய் விக்ரம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளியை டெல்லி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். ஹவாலா ஏஜென்ட்டான ஜெய் விக்ரமை போலீசார் கைது செய்து டெல்லி அழைத்து சென்றுள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் இடைத்தரகர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு பணம் தர முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது. சுமார் 60 கோடி வரை பேரம் பேசப்பட்டு முன்பணம் அளிக்கப்பட்டதாகவும் அந்தத் தொகையுடன் தெற்கு டெல்லி பகுதியில் இடைத்தரகர் சுகேஷை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.
இந்த வழக்கில் நாளைக்குள் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் ஜெய் விக்ரம் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சுகேஷின் கூட்டாளி இந்த ஜெய் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications