அரசு மீது களங்கம்... அவதூறு வழக்கு பாயும் - கமலை மறைமுகமாக எச்சரிக்கும் ஜெயக்குமார்
அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னை: அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என்று கமலுக்கு மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் அரசியல் ரீதியாக கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதை தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இமெயில் முகவரி நீக்கம்
செய்தியாளர்கள் அவரிடம் கமல் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். அரசுத்துறை ஊழல் குறித்த புகார்களை அமைச்சர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு நடிகர் கமலஹாசன் கூறியதை அடுத்து, அரசு இணையதளத்தில் அவர்களின் மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.
அவதூறு வழக்கு
நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சிப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள் கண்டனம்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு ஆட்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் மீது அவதூறு வழக்கு தொடர போவதாகவும் எச்சரித்து உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊழல் ஆதாரங்கள்
அமைச்சர்களுக்கு ஊழல் ஆதாரங்களை அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் தனித்தனியாக தங்களிடம் இருக்கும் ஊழல் ஆதாரங்களை அமைச்சர்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு கடிதங்களையும் இணைத்து அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.