டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பெண்களின் மண்டையை உடைப்பதா?: ஸ்டாலின் கொந்தளிப்பு
சென்னை: சென்னை நொளம்பூரில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய ‘மக்கள் அதிகாரம்' அமைப்பினர் மீதும், பெண்கள், சிறுவர்கள் மீதும் இன்று(நேற்று) சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதல்
குறிப்பாக பொன்னேரி அருகில் உள்ள நாபாளையம், சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதிகளில் போராடிய பெண்கள் மீது இரக்கமற்ற முறையில் போலீசார் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே ‘மூடு டாஸ்மாக்கை மூடு' என்று பாடிய கோவன் மீது அ.தி.மு.க. அரசு தேசத் துரோக வழக்கு போட்டது. மதுக்கடையை மூட வேண்டும் என்று போராடிய பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்தது.
சசிபெருமாள்
மது விலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாளை செல்போன் டவரிலேயே சாகவிட்டது. இப்போது மீண்டும் பெண்கள் மீதெல்லாம் போலீஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மதுவின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் மதுவிலக்கு கோரி பெருமளவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மது
ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில் எந்தவித தவறும் இல்லை. இந்த போராட்டங்களில் நியாயமும் இருக்கிறது. அதற்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோர் மீதும் இப்படி காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி பெண்களின் மண்டையை உடைப்பதும், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதும் முற்றிலும் மனித உரிமைகளுக்கு எதிரானது.
அதிமுக அரசு
அமைதியான போராட்டங்களை அடக்கும் அ.தி.மு.க. அரசின் இந்த முரட்டுத்தனமான போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆட்சியை விட்டு வெளியேறப் போகும் இந்த தருணத்தில் கூட காவல்துறையை பொதுமக்களுக்கு எதிராக, குறிப்பாக பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிராக ஏவி விடுவது மனிதாபிமானமற்ற செயல். இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதுவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீசாரை வைத்து கைது செய்து தனது அநாகரீகச் செயலை அ.தி.மு.க. அரசு அரங்கேற்றியுள்ளது.
பெண்கள்
மதுவிலக்கு வேண்டும் என்று கோரும் பெண்கள் மீது ஒரு புறம் தடியடி நடத்தும் அ.தி.மு.க. அரசு. இன்னொரு பக்கம் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகிறது. அ.தி.மு.க.வின் இந்த நாடகங்களுக்கும், அந்தக்கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக எடுக்கப்படும் இந்த அராஜக நடவடிக்கைகளுக்கும் மக்கள் வருகின்ற மே 16-ம் தேதி தக்க பதிலடி கொடுப்பார்கள். மே 19-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய விரும்புகிறேன்.