எல்லா நேரத்திலும் விமர்சிக்கக் கூடாது, அரசின் மீட்புப்பணிகளில் திருப்தி... கமல்!
எல்லா நேரத்திலும் விமர்சிக்கக் கூடாது, குரங்கணி காட்டுத் தீ மீட்புப் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோயம்புத்தூர் : எல்லா நேரத்திலும் விமர்சிக்கக் கூடாது, குரங்கணி காட்டுத் தீ மீட்புப் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : ஜெயஸ்ரீ என்ற மாணவியின் பெற்றோரிடம் பேசினேன், இதில் யார் மீதும் கோபப்படுவதற்கு இல்லை. இது ஒரு விபத்து தான். அரசும் இந்த நேரத்தில் தேவையான உதவிகளை செய்து வருகிறது. எல்லா நேரத்திலும் விமர்சனம் செய்யக் கூடாது, இப்போது நம்முடைய நாட்டில் என்ன மீட்புப் பணி செய்ய முடியுமோ அதை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பாராட்டுகள்.
காணாமல் போனவர்களை தேடி வருகிறார்கள், அதனை அரசு தொடர்ந்து செய்யும் என நம்புகிறோம். பெற்றோருக்கு அனுதாபம் சொல்வதை விட வேறு வழியில்லை. 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் என்பது மிகவும் கஷ்டமான நேரம், பெற்றோர் உணர்ச்சிவசப்படாமல் மருத்துவ உதவிக்கு தொந்தரவு செய்யக் கூடாது.

கோரமான சம்பவம்
இந்த மாதிரியான நிகழ்வுகள் தான் நமக்கு பாடம் கற்றுத் தரும். இந்த கோர சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு இனி இதுபோன்று நிகழாமல் இருக்க செய்ய வேண்டியவற்றை செய்ய வேண்டும். இதற்காக காட்டிற்குள் யாரும் மலையேற்றம் இல்லையென்று சொல்லக் கூடாது, மலையேற்றம் செய்யப் போகிறவர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

நிவாரணம் கொடுக்கும் அளவு பணம் இல்லை
குரங்கணி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை, அரசு நிவாரணம் கொடுக்கிறது என்றால் அது மக்கள் பணம், நான் கொடுப்பது நான் சம்பாதித்த பணம். எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்றால் நான் சம்பாதித்த பணம் போதாது.

தண்ணீர் சேமிப்பு அவசியம்
வனப்பகுதியில் தீக்குச்சி, சிகரெட் போன்றவற்றை தூக்கிப் போடுவதை தவிர்க்க வேண்டும். வனங்கள், உயிரினங்களை பாதுகாப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது. தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி பிரச்னையை தீர்க்க முடியாத விஷயமாக்கி இருக்க வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. காவிரி விவகாரத்தில் நான் பிரச்னையை எழுப்புவேன் ஆனால் என்னை யார் என்று கேட்பார்களே, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் என்று சொன்னாலும் அது எடுபடாது. எனினும் தொடர்ந்து என்னுடைய குரலை பதிவு செய்து வருவேன், என்றாவது ஒரு நாள் அது பயன் தரும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications