ஹவாலா பாணியில் ஆர்கே நகரில் பணம் விநியோகம்... தினகரன் மீது பாஜக வேட்பாளர் பகீர் புகார்
ஹவாலா பாணியில் ஆர்கே நகருக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் மீது பாஜக வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஹவாலா பாணியில் ஆர்கே நகருக்கு பணம் விநியோகம் செய்துள்ளதாக டிடிவி தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பகீர் புகார் அளித்துள்ளார்.
ஆர்கே நகருக்கு கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா புகாரினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த தொகுதிக்கு டிசம்பர் 21-ஆம் தேதி மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் இந்த தொகுதிக்குள்பட்ட வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் ரூ. 2000 நோட்டுகளை ரூ.6000 வரை தருவதாக திமுக, பாஜக புகார் தெரிவித்தன. மேலும் குக்கர் சின்னம் பெற்ற தினகரனும் வீடு வீடாக குக்கர்களை விநியோகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மீண்டும் ரத்தாகும்
ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் வருமான வரித் துறையினர் ரெய்டும் நடத்தினர். இத்தகைய பணப்புகார்களை அடுத்து தேர்தல் மீண்டும் ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வாக்கு பதிவு தொடங்கியது
ஆனால் ஆர்கே நகருக்கு இன்று இடைதேர்தல் தொடங்கி வாக்கு பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் கரு நாகராஜன், டிடிவி தினகரன் மீது பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.
கடத்தல் பொருள்
அவர் கூறுகையில் பொதுவாக ஹவாலா கடத்தல்காரர்கள் ரூபாய் நோட்டை இரண்டாக கிழித்து பாதியை ஓரிடத்திலும் மீதி பாதியை ஒருவரும் வைத்துக் கொள்வர். சம்பந்தப்பட்ட நபர் பாதி நோட்டை மற்றொரு நபரிடம் காண்பிக்கும் போது கடத்தல் பொருள்கள், பணம் கைமாற்றப்படும்.
ரூ. 20 நோட்டு
அதுபோல் ஹவாலா மோசடி வழக்கில் தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து அதில் அவர் சிக்கியுள்ளார். அந்த பழக்கத்தினாலோ என்னவோ ஹவாலா பாணியில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று இரவு முதல் ஆர்கே நகரில் உள்ள வாக்காளர்களுக்கு ரூ.20 நோட்டை கொடுத்துள்ளனர் தினகரன் அணியினர்.
ரூ.6000 லஞ்சம்
அவர்கள் கூறும் ஒரு போன் நம்பருக்கு ரூ.20-இல் உள்ள சீரியல் எண்ணை (வரிசை எண்) குறிப்பிட்டால் போதும் அந்த வாக்காளருக்கு ஒரு வோட்டுக்கு ரூ. 6000 லஞ்சமாக வழங்கப்படுகிறது என்று பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.