கடலூர் கூட்டுறவு வங்கியில் கை மாறிய ரூ. 60 கோடி யாருடையது?- வருமான வரித்துறை விசாரணை
கடலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 கோடி அளவிலான பழைய ரூபாய் நோட்டுகள் முறைகேடாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
கடலூர்: கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.
சேலத்தை தொடர்ந்து, கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியிலும் வெள்ளிக்கிழமையன்று அமலாக்க பிரிவு இயக்குநர் ராஜசேகர் தலைமையில், துணை இயக்குநர், உட்பட மூன்று பேர் சோதனை நடத்தினர் கடலூர் மாவட்டத்தில் மட்டும் நவம்பர் 10 முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்களில் சுமார் 60 கோடிக்கு மேல் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
கள்ள நோட்டு, கருப்பு பணத்தை ஒழிக்க, நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ரூ 500 , 1000 செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி. செல்லாத ரூ 500, 1000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், அல்லது அவரவர் கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று கூறினார்.
நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரையில் தமிழக கூட்டுறவு வங்கிகளில் செல்லாத நோட்டுகள் அதிகமாக வருவதை தெரிந்த ரிசர்வ் வங்கி, தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணம் விநியோகம் செய்யலாம், ஆனால் செல்லாத பணத்தை வாங்கக்கூடாது என்றும், 14ஆம் தேதி முதல் செல்லாத பணத்தை வாங்கினால் ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறியது.
பல இடங்களில் வருமான வரி சோதனையும் நடைபெற்றது. இதில் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள், முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களின் நடந்த சோதனையில் நகை, பணம் மட்டுமின்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தை யார் மூலம் புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டது என்று சேகர் ரெட்டி எழுதி வைத்திக்கிறாராம். இதன் அடிப்படையிலேயே கூட்டுறவு வங்கிகளை குறிவைத்து களமிறங்கியுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

கூட்டுறவு வங்கிகள்
தமிழகத்தில் உள்ள பல கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வருகின்றன. அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கோடு
பணத்தை மாற்றியவர்கள் யார் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் சோதனை
இந்நிலையில் நேற்று கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையின் அமலாக்க பிரிவுன் துணை இயக்குநர் ராஜசேகர் தலைமையில் செயல் அலுவலர் லோமேஷ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது. கடந்த சில நாட்களில் அதிகமாக பணம் டெபாசிட் செய்தவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள்
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 29 கிளைகள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டில் 2 நகர கூட்டுறவு வங்கிகளும், 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளைகளும் உள்ளன. அனைத்து வங்கி கிளைகளின் கணக்குகளையும் அமலாக்கதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரூ. 60 கோடி பணம்
கடலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 கோடி அளவிலான பழைய ரூபாய் நோட்டுகள் முறைகேடாக மாற்றப்பட்டது தெரியவந்தது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சந்தேகத்திற்கு இடமான 13 பேரை நேரில் அழைத்து வருமானவரித்துறையின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செல்லாத நோட்டுகளை கொடுத்துவிட்டு, நல்ல நோட்டுகளை பெறமுடியாமல் இன்றுவரையில் சிரமத்தில் இருந்து வருகிறார்கள் அப்பாவி சாமானிய மக்கள்.












Click it and Unblock the Notifications