மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகள் கைது.. என்.ஐ.ஏ வேட்டை தொடருகிறது
மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகளை இன்று கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள்.
மதுரை: மைசூர் கோர்ட் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு ஏஜென்சி மேலும், இருவரை மதுரையில் கைது செய்துள்ளது.
மைசூரில் சில மாதங்கள் முன்பு கோர்ட் வளாகத்தின் வெளியே குண்டு வெடித்தது. அதை ஆய்வு செய்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளுக்கு, ஏற்கனவே ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும், கேரளாவின் கொல்லம் நகர நீதிமன்றங்கள் அருகே நடந்த குண்டு வெடிப்புக்கும் இதற்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது.
அவ்விரு நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளின்போது, ஒசாமா பின் லேடன் படத்துடன் கூடிய, நோட்டீஸ் சிக்கியது. மைசூரில் அப்படி எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் தொடர்புகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக, மதுரையில் நேற்று 3 தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இன்று, சம்சுதீன் மற்றும் முகமது ஆயுப் ஆகிய மேலும் இரு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் அல்-உம்மா தீவிரவாதிகள் என்றும், தற்போது அடிப்படை இயக்கம் என பெயரை மாற்றிக்கொண்டு, அல்கொய்தாவின் கிளை போல செயல்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள், மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பெங்களூர் அழைத்துவரப்படுகிறார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.