நான்கரை ஆண்டுகளாக வடிவேலுவை காணோம்!: ச.ம.கவினர் அதிரடி போஸ்டர்
நடிகர் சங்க கட்டிடத்தை காணோம் என்று பேட்டியளித்த நடிகர் வடிவேலுக்கு பதிலடி தரும் விதமாக கடந்த நான்கரை வருடங்களாக காணோம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்து வருகிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மதுரையில் பேட்டியளித்த நடிகர் வடிவேலு, நடிகர் சங்கத்தை காணோம் அதைத்தான் தேடி கொண்டு இருக்கிறோம் என்று பேட்டியளித்தார்.
நடிகர் சங்கத்தை காணோம் என்று பேட்டியளித்த நடிகர் வடிவேலு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த தியாகு என்பவர் நேற்று வடிவேலுவுக்கு எதிராக சென்னை நகரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அதில், கடந்த நான்கரை வருடங்களாக நடிகர் வடிவேலுவை காணோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தியாகு, நடிகர் சங்க உறுப்பினர் என்றும் அந்த உறுப்பினர் எண்ணும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு விஜயகாந்த்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் படவாய்ப்புகள் எதுவும் இன்றி சில ஆண்டுகள் வீட்டில் இருந்தார். அவர் ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்கள் எதுவும் ஓடவில்லை. இதனாலேயே வடிவேலுவை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர் சமத்துவ மக்கள் கட்சியினர்.
நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் கட்சியினர் நுழைந்து போஸ்டர் ஒட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வடிவேலுவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போஸ்டர் குறித்து நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். வடிவேலுவுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போஸ்டர் குறித்து நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.