நடிகர் சங்க தேர்தல்: ரஜினி, கமலுக்கு ரோஜா உருக்கமான வேண்டுகோள்
ஹைதராபாத்: தென்னிந்திய நடிகர் சங்கம் பிளவுபடாமல் ஒரே குடும்பமாக, நண்பர்களாக மாற வேண்டும். அதற்கு திரைப்படத் துறையின் மூத்த கலைஞர்களான ரஜினிகாந்த்தும், கமலஹாஸனும் முயற்சி எடுக்க வேண்டும் என்று நடிகை ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் ஹாலிவுட் என்று புகழ் பெற்ற சென்னை நகரத்தில், தென்னிந்திய மொழிகளின் படங்கள் தயாரிக்கப்பட்ட பொற்காலத்தில் தொடங்கப்பட்டது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். மதிப்பிற்குரிய நமது தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் பெற்று தமிழக முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இன்றும் இறந்தும் இறவாத அழியா புகழ் பெற்ற அமரராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அம்மா
அவரைத் தொடர்ந்து உறுப்பினர் திரு. என்.டி. ராமாராவ் அவர்களும் ஆந்திர மாநில முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். பிறகு, நமது புரட்சித் தலைவி அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்கள் முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார். இது போன்ற உலக அரசியல் சாதனைகள் கொண்டது மட்டுமின்றி நமது சங்கம் உலக புகழ் பெற்ற சாதனையாளர்கள் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன், திரு. என்.எஸ். கிருஷ்ணன், திரு. எம்.ஆர். ராதா, திரு. டி.எஸ். பாலையா, திரு. வி.கே. ராமசாமி, திரு. கண்ணம்மா, திருமதி. பானுமதி, திருமதி. சாவித்திரி, திருமதி. அஞ்சலி தேவி போன்ற அழியாப்புகழ் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பாரம்பரியப் பெருமை கொண்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம்
காலத்தில் திரைப்படத் தொழில் அந்தந்த மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு நடிகர்கள் சங்கம், கர்நாடக மாநிலத்தில் கன்னட நடிகர்கள் சங்கம், கேரளத்தில் மலையாள நடிகர்கள் சங்கம் என்று தனித்தனி சங்கங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. ஆயினும், பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழர்களாகவே இருந்தபோதும் தமிழ் நாட்டில் மட்டும் நடிகர்கள் சங்கம் மொழி பேதமின்றி ஒரே குடும்பமாக பழமையின் பாதுகாவலனாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்று செயல்பட்டு வருகிறது.
நடிகர்கள்
நடிகர்கள் மக்களிடம் செல்வாக்கும், பெரும் மதிப்பும் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஒரு நல்லதை செய்தாலும் நூறு நல்லதாகவும், ஒரு சிறிய தவறு செய்தாலும் கூட அது பெரும் தவறாக நமது மக்களிடம் சென்றடைந்து விடுகிறது. தமிழர்கள் நடிகர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்கள் தொடர்பான அனைத்து செய்திகளும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக தமிழ்நாட்டில் மாறிவிடுகின்றன. அது போலவே தற்போது நடிகர் சங்கத்தின் தேர்தல் பற்றிய செய்திகள் விதவிதமாக-பரபரப்பாக வந்த வண்ணம் உள்ளது.
நடிகர் சங்க தேர்தல்
தற்போது நமது சங்க தேர்தல் களத்தில் போட்டியிடும் அணிகள் இரண்டாக பிளவுபட்டு, பலவிதமான கருத்து வேறுபாடுகளுடன் பத்திரிக்கை செய்திகள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்ற இந்த நிலை நீடித்தால், மொத்தமாக எல்லா நடிகர்களுக்கும் இழுக்கு ஏற்படக்கூடிய நிலையே நிச்சயம் உருவாகும்.
இரண்டு அணிகள்
ஒரு அணியில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் போன்ற அனுபவம் பெற்றவர்கள், மறு அணியில் விஷால், நாசர், சூர்யா, கார்த்தி என்று பல புதியவர்கள் இருந்தாலும் அனைவரும் சங்கத்தின் நலனுக்காக உழைக்க விரும்பும் உறுப்பினர்கள் என்பதில் சிறிதேனும் ஐயம் இல்லை.
விஜயகாந்த்
பல்லாண்டு காலம் சங்கத்துக்காக உழைத்த மூத்த உறுப்பினர்களை, புதியவர்கள் சிறுமைப்படுத்துவதோ அல்லது சங்கத்தின் வளர்ச்சிக்கு நமது சேவையும் இருக்க வேண்டும் என விரும்பும் இளைஞர்களை - புதியவர்களை நிர்வாகத்தில் உள்ளவர்கள் அலட்சியப்படுத்துவதோ, நிராகரிப்பதோ ஏற்புடையதல்ல. சங்கத்துக்காக நீண்ட காலம் உழைத்தவர்களை தேர்தல் கள ஆவேசத்தில் குறை சொல்லி சிறுமைப்படுத்துவதும் நல்லதல்ல. ஏனெனில் சங்கம் வங்கியில் வாங்கிய கடனுக்காக, கடனில் மூழ்கி, சங்கமே வங்கியின் கைக்குள் போய்விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது, அந்த நிலையை மாற்றி கடனை அடைத்தவர்களில் விஜயகாந்த், சரத்குமார் முதன்மையானவர்கள் என்பது யாவரும் மறுக்க முடியாத உண்மையாகும். அன்று அவர்கள் தலைமை ஏற்காமல் இருந்திருந்தால், இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென இந்த இடமே இல்லாமல்கூட போயிருக்கலாம்.
சரத்குமார்
மலேசியா, சிங்கப்பூரில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கலை விழாவில் சக கலைஞர்களின் பயண உடைமைகளை தூக்குவதிலிருந்து, அவர்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளுக்கு சாப்பாடு எடுத்து வந்து வைக்கும் வேலைகள் வரை அனைத்து வேலைகளையும் எந்த கூச்சமோ, அவமான உணர்வோ இல்லாமல் செய்தவர் சரத்குமார் என்பதை அந்த கலை விழாவில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இதை விஷால், சூர்யா, கார்த்தி போன்ற அவர்கள் அணியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் பணிவன்புடன் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
கார்த்தி
அதுபோன்றே கார்த்தி, சூர்யா, விஷால், நாசர் போன்ற நண்பர்களுடன் பேசும்போது அவர்கள் கருத்துகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. சரத்குமார் அவர்கள் மீது நன்மதிப்பு கொண்டவர்களாகவே தெரிகிறார்கள். ராதாரவி அவர்கள் அப்படி பேசினார், இப்படிப் பேசினார் என்ற சின்ன மன வருத்தங்களைத் தவிர அவர்களுக்கு ராதாரவி அவர்கள் மீதும் எந்த தனிப்பட்ட விரோதமும் இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் வருத்தமெல்லாம் தென்னிந்திய நடிகர் சங்க நிலம் தனியார் கைகளுக்குப் போய்விடக் கூடாது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இடம் நடிகர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு தவறான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இதை சரத்குமார் அவர்களிடம் நான் தெரிவித்தபோது, ‘தென்னிந்திய நடிகர் சங்க கட்டட ஒப்பந்தத்தில் இது தவறாக இருக்கிறது, இதை நீக்க வேண்டும் என்று சிவக்குமார் அவர்களோ, சூர்யா, கார்த்தி, விஷால், பொன்வண்ணன், நாசர் அவர்களோ யாருமே இதுவரை என்னிடம் பேசியதில்லை. அது குறித்து கேட்டதில்லை. உண்மையில் இந்த ஒப்பந்தம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சாதகமானது. இருப்பினும் உண்மையிலேயே அவர்களின் கோரிக்கை அதுதான் என்றால் அந்த ஒப்பந்தத்தில் எந்த தவறு இருந்தாலும் அதை மாற்றிக் கொடுக்கிறேன்' என்று தெரிவித்தார். அப்போது எந்த பிரச்னையும் இல்லை. அப்படி என்றால் ஏன் இந்த தகராறு...?
அரசியல்
பொதுவாகவே நடிகர்கள் உணர்வுபூர்வமானவர்கள். யாரோ ஒருசிலர் அவர்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஒன்று சேரவிடாமல் தடுத்து இந்த அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது. இதுபோன்ற சூழ்நிலை சங்கங்களில் உருவாவது ஒன்றும் புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இதுபோன்ற பிரச்சனை உருவானபோது, மூத்த இயக்குநர்கள் இரு அணியாக பிரிந்து நின்றபோது, பாரதிராஜா, என் கணவர் ஆர். கே. செல்வமணி மற்றும் பி. வாசு, கே.எஸ். ரவிக்குமார் போன்ற சில மூத்த திரைப்பட இயக்குநர்கள் முன்முயற்சி எடுத்து அந்த சிக்கலை மிக சுமுகமாக தீர்த்து வைத்து ஒற்றுமையை உருவாக்கினார்கள். இன்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்ற சங்கங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
ஒரே குடும்பம்
நமது தென்னிந்திய நடிகர் சங்கம் இது போன்ற முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, நண்பர்களாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்கு திரைப்படத் துறையின் மூத்த கலைஞர்களான ரஜினிகாந்த்தும், கமலஹாஸனும் முயற்சி எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.
சரத் சார்
ஹைதராபாதில் நான் குழந்தைகளை பள்ளிக்கு அழத்துச் செல்ல கிளம்பும் போது, ‘சரத் சார் போன் செய்திருந்தார். நடிகர் சங்க தேர்தலுக்கு வர வேண்டும்' என்றார். நானும் தகுந்த நேரத்தில் சென்னைக்குக் கிளம்ப இருந்தேன். நான் குழந்தைகளை பள்ளியில் விட்டு வீடு திரும்பினேன். கார்த்தி போன் செய்திருந்தார். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இவர்கள் இரண்டுபேரும் எதிரெதிராக உள்ளது கவலையாக இருக்கிறது. என்ன முடிவு எடுக்கிறது என்று தெரியவில்லை.
வருத்தம்
இன்றைய சூழல் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மட்டுமல்ல பல கலைஞர்களும் இது போன்று வெளியில் சொல்ல முடியாத சங்கடத்துடன் இருக்கிறார்கள். நம் சக கலைஞர்களை நிர்பந்தத்திற்குள்ளாக்கும் இந்தச் சூழலை மாற்றி, நாம் அனைவரும் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைத்து நம் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் விதமாக நாம் செயல்பட வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்றார் ரோஜா.