சென்னை, கடலூரைத் தொடர்ந்து நாகையைப் புரட்டி எடுத்த கன மழை... கதிகலங்கிப் போன காரைக்கால்
நாகப்பட்டனம்: சென்னை, கடலூர் மாவட்டங்களைத் தொடர்ந்து தற்போது நாகப்பட்டனம் மாவட்டத்தை பலத்த மழை புரட்டி எடுத்து வருகிறது. மாவட்டத்திலேயே அதிக அளவாக வேதாரண்யத்தில் மிக பலத்த மழை பெய்துள்ளது. அதேபோல பக்கத்தில் உள்ள காரைக்காலையும் மழை படுத்தி எடுத்து வருகிறது.
சென்னையில் அடித்து நொறுக்கிய மழை தந்த பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. அதேபோல கடலூரும் தொடர்ந்து கன மழையில் சிக்கித் திணறிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நாகை மாவட்டத்தை மழை பதம் பார்த்து வருகிறது.
காவிரி டெல்டா பகுதியில் கடை நிலை மாவட்டமான நாகையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று முழுவதும் அங்கு மழை மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டது.
வெள்ளக்காடான வேதாரண்யம்
வேதாரண்யத்தில்தான் மிக பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 22 செமீ மழை பதிவாகியுள்ளது. தொடர் பலத்த மழை காரணமாக வேதாரண்யமே வெள்ளக்காடாகிப் போனது.
வீடுகளுக்குள் வெள்ளம்
நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. பல நூறு வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பெரும் துயரத்தைச் சந்திக்க நேரிட்டது.
பயிர்கள் நாசமாகின
மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமா பயிர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3.5 லட்சம் சம்பா நெற் பயிர்குளும், விளைந்த நெல்மணிகளும் நீரில் மூழ்கிப் போயுள்ளன. அதேபோல பிற பயிர்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
5 பேர் பலி
தொடர் மற்றும் கன மழைக்கு மாவட்டத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
20 முகாம்கள்
வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட மக்களை தங்க வைக்க 20 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இதேபோல 16 மீனவ கிராமங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள் பல சேதமடைந்துள்ளன.
மீனவர்களுக்குப் பாதிப்பு
மீனவர்கள் கடந்த சில நாட்களாகவே மீன் பிடிக்கப் போகவில்லை. வேதாரண்யம், பூம்புகார், பழையாறு உள்ளிட்ட பகுதி மீனவர்கள் கடலுக்குப் போகாமல் இருப்பதால் வருமானம் பறிபோயுள்ளதாக வேதனைப்படுகின்றனர்.
திருவாரூரிலும் பலத்த சேதம்
திருவாரூர் மாவட்டத்தையும் மழை வெள்ளம் விடவில்லை. மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்ட பல கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு ஆற்றங்கரை உடைந்தது. இதனால் ஆற்று நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் மேலமருதூர், வடபாதி, தென்பாதி, பிராந்தியக்கரை, மணக்காடு, கரியாப்பட்டினம், தாணிகோட்டகம், பிச்சகொட்டகம், காரமடை உள்ளிட்ட 10 கிராமங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
காரைக்காலை வெளுத்து வாங்கிய மழை
நாகைக்கு அருகில் உள்ள புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலிலும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் அங்கு விடாமல் மழை வெளுத்துக் கொட்டியது. தொடர் மழையால் அரசாலறு, நண்டலாறு, திருமலை ராஜனாறு, வாஞ்சியாறு, நூலாறு உள்ளிட்ட காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.