அண்ணா, கருணாநிதி போல தொண்டர்கள் நெஞ்சைத் தொட்டு பேசும் தினகரன்... நெகிழும் நாஞ்சில் சம்பத்
அண்ணா, கருணாநிதி போல தொண்டர்கள் நெஞ்சைத் தொடும் வகையில் தினகரன் பேசுவதாக நெகிழ்ந்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: பேரறிஞர் அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி போல தொண்டர்கள் உள்ளத்தைத் தொடும் வகையில் தினகரன் பேசுவதாக அவரது அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நெகிழ்ந்து போயுள்ளார்.
தினகரனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது உளவுத்துறை. உள்ளாட்சித் தேர்தலுக்காக தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், அது எடப்பாடிக்கு சாதகமாக முடியும். இரட்டை இலை தொடர்பான வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். டி.டி.வி ஆதரவாளர்களும் தனிக்கட்சி மூடில் உள்ளனர் என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து கட்டுக்கடங்காத உற்சாகத்தில் வலம் வருகிறார். இது தம்முடைய தலைமைக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பு. நாளைக்கே சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் மக்கள் நம்மைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அ.தி.மு.க வரலாற்றில் நாம் புதிய சகாப்தம் எழுதிக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க என்றாலே நாம்தான் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் தினகரன்.
அதிமுகவினருக்கு அட்வைஸ்
இந்தத் தோற்றத்தை உடைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அரசு தரப்பு. தினகரன் தனிக்கட்சி தொடங்கட்டும். அவருக்கும் அ.தி.மு.கவுக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் குழப்பத்தைப் போக்க வேண்டும். இதை நாம் சரியாகச் செய்யாததால்தான் ஆர்.கே.நகரில் தோல்வியைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர்.
நிர்வாகிகளுக்கு பாராட்டு
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார் தினகரன். இந்தப் பேச்சில் ஆளும்கட்சி அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்தும் தனக்குத் தோள் கொடுத்த நிர்வாகிகளை தட்டிக் கொடுத்தும் பேசினார்.
என்னமோ இருக்குய்யா
ஆதரவாளர்களின் நெஞ்சைத் தொடும் வகையில் தினகரன் பேசிய பேச்சை, பெரிதும் ரசித்துக் கேட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். 'இந்த மனுஷனுக்குள்ள என்னமோ இருக்குய்யா' என நெகிழ்ந்து போனவர், 'ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ பேசும்போது, தொண்டர்களுக்கும் அவருக்கும் சம்பந்தமே இருக்காது. ஏன் பல நேரங்களில் மக்களுக்கும் அவருக்குமே சம்பந்தம் இருக்காது. துண்டை முறுக்கி முறுக்கி அவர் முழங்கினாலும், யார் மனதிலும் அவர் சொன்ன விஷயங்கள் பதிந்திருக்காது. அண்ணா, கருணாநிதி என எனப் பலரது பேச்சுக்களை ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்றிருக்கிறார்.
திரளப் போகும் கூட்டம்
மேலும் தொண்டர்களோடு உறவாடும் வகையில் அவர்களுடைய பேச்சுக்கள் இருக்கும். இதே பாணியில் தினகரன் பேசுகிறார். இப்படியொரு அற்புதமான பேச்சை நான் கேட்டதில்லை. ' இவர் என்ன பேசப் போகிறார்' என அமைதியாகத்தான் இருந்தேன். ஒவ்வொரு நிர்வாகிகளின் உள்ளத்தையும் தொட்டுவிட்டார் தினகரன். வரும் நாட்களில் அவருடைய பேச்சுக்காகவே கூட்டம் கூடும்' என சிலாகித்திருக்கிறார்.