எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேவலப்படுத்தியவர்கள் கருணாநிதி, ஜெ., விஜயகாந்த்.. நெடுமாறன் தாக்கு
ராமநாதபுரம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சிறுமைப்படுத்தியவர்கள் திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்.
இவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த காலத்தில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறினர் என்று குற்றம் சாட்டியுள்ளார் நெடுமாறன்.
ராமநாதபுரத்தில் நடந்த வாக்காளர் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு சாடினார் நெடுமாறன். அவரது பேச்சிலிருந்து..
தமிழகத்தின் துரதிர்ஷ்டம்
தமிழக சட்டசபை ஆரோக்கியமான விவாதம் எதையுமே நடத்தியதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 30 வருடமாக ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவர் தமிழகத்திற்குக் கிடைக்காதது மிகவும் வேதனையானது.
மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை
ஒரு கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தைக் கொடுக்கிறார்கள். இன்னொரு கட்சியை எதிர்க்கட்சி வரிசையில் உட்காரச் சொல்கிறார்கள். அந்த கட்சி தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும். மக்கள் தீர்ப்பை அது மதிக்க
வேண்டும்.
துரோகிகள்
ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக வரும் யாருமே இதைச் செய்வதில்லை. மக்கள் தீர்ப்பை மதிப்பதில்லை, ஏதை ஏற்பதில்லை. மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையில்தான் நடந்து கொண்டு வருகிறார்கள். சட்டசபைக்குக் கூட வருவதில்லை.
ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது
1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இந்த மக்கள் விரோதப் போக்கை ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார். அன்று சட்டசபையில் நடந்த சம்பவத்திற்குப் பின்னர் அவர் சட்டசபைக்கு வரவேயில்லை.
கருணாநிதி தொடர்ந்தார்
அதன் பின்னர் 1991ம் ஆண்டு கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார். அவரும் ஜெயலலிதாவைப் பின்பற்றி சட்டசபைக்கு வரவில்லை. தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.
விஜயகாந்த்
இவர்களுக்கு அடுத்து எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் மக்களை ஏமாற்றும் வகையில்தான் நடந்து கொண்டார். இவரும் அதிமுகவுடனான கூட்டணி முறிந்த பின்னர் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை.
சிறுமைப்படுத்தி விட்டனர்
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. கிட்டத்தட்ட முதல்வர் பதவிக்கு சமமானது. ஆனால் இந்தத் தலைவர்கள் அதை சிறுமைப்படுத்தி விட்டனர்.
விலக வேண்டியதுதானே
அந்தப் பதவியில் இருப்பது தங்களுக்கு அவமானம் என்று இவர்கள் நினைத்தால், ராஜினாமா செய்து விட்டு வேறு ஒருவரை அப்பதவியில் அமர்த்தி செயலாற்ற வைக்க வேண்டும். அதை இவர்கள் செய்யவில்லை என்றார் நெடுமாறன்.