சட்டசபை வன்முறை... 'சுயரூபத்தை காட்டியது திமுக'... வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
சென்னை: 2011 தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக வெளிப்பட்ட மக்கள் கோபம், இப்போதுதான் மெ..ல்லத் தணிந்து வரும் நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறை வெறியாட்டம், மீண்டும் அக்கட்சிக்கு எதிரான வெறுப்பலைகளைக் கிளப்பியுள்ளது.
சமூக வலைத் தளங்களில் மக்கள் ஆவேசமாக வெளிப்படுத்தி வரும் கருத்துகள் அதை உறுதிப்படுத்துகின்றன.
இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்து பேசினார்.
ஆனால் வாக்கெடுப்பு நடக்கவிடாமல் திமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். மைக்குகள் உடைக்கப்பட்டன, சேர்கள் பறந்தன. சபாநாயகர் தனபால் தாக்கப்பட்டார். இதனால் இருமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் முன் எப்போதையும் விட அதிகமாகக் கூர்ந்து நோக்கும் மக்கள், சமூக வலைத் தளங்களில் திமுகவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
'20-30 எம்எல்ஏக்கள் இருந்தாலே திமுகவினரின் அட்டகாசத்துக்கு குறைவிருக்காது. இப்போது, காங்கிரஸ், பன்னீர் அணி எல்லாமாகச் சேர்த்து 108 பேர் உள்ளனர். அமோகமாக வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்," என்று ஒருவர் கருத்து கூறியுள்ளார்.
ஒரு மிஸ்டர் பொதுஜனம் இப்படி குறிப்பிட்டுள்ளார்: "இந்த எலெக்ஷன் முடிந்த பிறகு அதிமுகவில் நடக்கும் கூத்துகளைப் பார்த்த பிறகு, ஸ்டாலின் பரவாயில்லை என்று நினைத்தவர்கள் முகத்தில் கரி பூசிவிட்டார் ஸ்டாலின்."
'திடீரென்று காக்காய்-பாட்டி.வடை கதை நினைவில் தோன்றி மறைகிறது.. கெட்டது வரக்கூடாது என்பதற்காக கெட்டதுகளின் ரகளை' என்று ஒரு பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார்.
"பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தால் குதிரை பேரம் நடக்கும். எனவே உடனே நடத்துங்கள் என முதலில் கூறிவந்த ஸ்டாலின் இப்போது மீண்டும் அவகாசம் கேட்பது ஏன்... கடைசியில் சசிகலா சொன்ன திமுக - பன்னீர் கூட்டம் அம்பலமாகிவிட்டதே," என ஒரு சமூக வலைத்தளவாசி தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டு அதிமுக ஆட்சியைக் கலைக்கவே திமுக வன்முறையை அரங்கேற்றியிருக்கிறது என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.