"நீட்"டைப் பார்த்து கெட்டுப் போன டிஎன்பிஎஸ்சி.. தேர்வில் வாட்ச், மோதிரத்துக்கு 'நோ' அனுமதி
குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வில் கைக்கடிகாரம் மற்றும் மோதிரம் அனுமதி இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னை : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ பணிகளுக்கான போட்டித் தேர்வு நடக்கும் அறைகளுக்குள் கைக்கடிகாரம் மற்றும் மோதிரம் போன்ற பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு வரும் 11ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்காக 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்காக இந்தத் தடவை கூடுதல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்வர்களுக்கு புதுப் புதுக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் அவர்கள் குழம்பி போய் உள்ளனர்.
தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்குள் தேர்வு கூடத்திற்குள் வரவேண்டும், அதன் பிறகு வந்தால் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹால் டிக்கெட், பேனா தவிர வேறு பொருட்கள் கொண்டு வர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது கைக்கடிகாரம், மோதிரம் அணிந்து வர கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் விடைகளை யோசித்து எழுத சாதாரண கைக்கடிகாரம் கண்டிப்பாகத் தேவைப்படும்.
அப்போதுதான் மணி பார்த்து கொண்டே பதற்றம் இல்லாமல் தேர்வை எழுத முடியும். இப்படி இருக்கையில் கைக்கடிகாரம் அணியக் கூடாது, மோதிரம் அணிய கூடாது என்று தேர்வாணையம் அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.