சட்டசபை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியே கிடையாது: ஜி. ராமகிருஷ்ணன் திட்டவட்டம்!
சென்னை: 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க விரும்பினர் கம்யூனிஸ்டுகள். ஆனால் அதிமுக யாரையும் கூட்டணி சேர்க்காமல் தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது அதிமுக எதிர்ப்பு நிலையை கையில் எடுத்துள்ளனர் கம்யூனிஸ்டுகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பலம் வாய்ந்த அதிமுகவை எதிர்த்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றாக இணைந்து வேட்பாளரை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அண்ணா தி.மு.க. அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
4 ஆண்டுகால அதிமுக ஆட்சி யில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. மத்திய பாஜக அரசின் கொள்கைகளையே அதிமுக அரசும் பின்பற்றி வருகிறது.

சமரசமே இல்லை
அதிமுக அரசு பதவியேற்ற முதல் நாளே ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என அறிவித்தோம். சமச்சீர் கல்விக்கு தடை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அதிமுக அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்க்கவே செய்தோம். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்துகொண்டது இல்லை.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 100 கொலைகள் நடந்துள்ளன. ஜனநாயக ரீதியாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சூழலில் அதிமுகவுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?

ஊழல் கட்சிகள்
ஊழல் எதிர்ப்பு என்கிறபோது அதில் திமுக, அதிமுக இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டும் ஊழல் கட்சிகள்தான். எனவே, திமுகவுடன் நெருங்குவதாகக் கூறுவது தவறானது.

ஓரணியில் திரட்டுவோம்
2016 சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் இல்லை. எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம். இவற்றுடன் உடன்படும் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications