கலாம் பிறந்தநாள்.. எட்டிக் கூடப் பார்க்காத தமிழக அமைச்சர்கள்.. மனம் குமுறிய அண்ணன்!
ராமேஸ்வரம்; முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாளான நேற்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக அமைச்சர்கள் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை என்று அப்துல்கலாமின் சகோதரர் முகமதுமுத்து மீரான்லெப்பை மரைக்காயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் நேற்று. அதே நாளில் அப்துல்கலாமுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமதுமுத்துமீரான் லெப்பை மரைக்காயர், பேரன் ஷேக்சலீம், குடும்பத்தினர் நசீமா மரைக்காயர், ஜெயினுலாபுதின், நிஜாம் உள்பட பலர் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அப்துல் கலாமிற்கு மரியாதை செய்தனர்.
பின்னர், மணிமண்டபம் கட்டுவதற்கான தொடக்கப் பணியை முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறையின் கூடுதல் இயக்குனர் பி.கே.சிங், அப்துல்கலாமின் நெருங்கிய நண்பர் டாக்டர் விஜயராகவன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பாதுகாப்புத்துறையின் கூடுதல் இயக்குனர் பி.கே.சிங், கலாம் மணிமண்டபம் தொடர்பான பணிகளை விரைவில் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் மணிமண்டபத்தை மத்திய அரசு திறக்க திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அறிவுசார்மைய கட்டடப் பணிகளின் வேலை தொடங்கும் என்று கூறினார்.
கலாமின் சகோதரர் முகமதுமுத்து மீரான்லெப்பை மரைக்காயர், அப்துல்கலாம் மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அப்துல்கலாமின் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பிலோ, மாவட்ட நிர்வாகம் சார்பிலோ அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற வருத்தத்தையும் அங்கு அவர் பதிவு செய்தார்.
முன்னதாக, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவிடம் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அவரது பெயரில் மணிமண்டபம் மற்றும் அறிவுசார் மையம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டு கடந்த ஜுலை மாதம் 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.