மங்கிப் போன மவுசு... காற்றாடும் ஆசிரியர் பயிற்சி கவுன்சிலிங்... கலக்கத்தில் ஆசிரியர் பள்ளிகள்!
நெல்லை: ஆசிரியர் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்தபடி மாணவர்கள் அதிகளவில் அதில் பங்கேற்காததால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கத்தில் உள்ளன.
மாநில கல்வியில் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 2016-17 கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தொடங்கியது. வரும் 9ம்தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.
முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. ஆன்லைன் முறையில் இந்த கலந்தாய்வு நடந்தது.
தமிழகம் முழுவதும் சுமார் 676 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், 3 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்பட பல ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.
மாநிலம் முழுவதும் இந்த கல்வி ஆண்டில் 9 ஆயிரம் காலி இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் சேர சுமார் 3 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்ட அளவில் விண்ணப்பித்தவர்களுக்கு சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நேர்முக தேர்வு நடந்தது. இதில் இரண்டு மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதல்வர் கோடா முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. தமிழக அளவில் முதல் நடந்த சிறப்பு பிரிவு கலந்தாய்வில் ஓருவர் கூட பங்குபெறவில்லை. முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் யாரும் சேரவிலலை. இதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் பிரிவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை.
மற்ற பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் பலரும் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் கலக்கததில் உள்ளன.