அதிமுகவில் இன்னொரு கோஷ்டி... கொங்கு லாபிக்கு பதிலடியாக வடமாவட்ட அணி உதயமாகிறது
அதிமுகவில் கொங்கு லாபிக்கு பதிலடியாக வடமாவட்ட கோஷ்டி ஒன்று உதயமாகி உள்ளது.
சென்னை: சிதறிப் போயுள்ள அதிமுகவில் மேலும் ஒரு கோஷ்டி உதயமாக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கும் கொங்கு லாபிக்கு எதிராக வடமாவட்ட அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களைக் கொண்ட புதிய அணி உருவாகி வருகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் எத்தனை கோஷ்டிகள் என்றே தெரியாத அளவுக்கு சிதறு தேங்காயக உடைந்துள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, திவாகரன், தோப்பு வெங்கடாசலம், பெரம்பலூர் தமிழ் செல்வன் கோஷ்டிகள் என நாள்தோறும் புதிய கோஷ்டிகள் உருவாகி வருகின்றன.
வடமாட்ட அதிமுக
தற்போது வடமாவட்ட அதிமுக கோஷ்டி ஒன்றும் உதயமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூரில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.
யார் யார்?
இந்நிகழ்ச்சியை அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூண்டோடு புறக்கணித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த 2 எம்.பிக்களான கடலூர் அருள்மொழி தேவன், சிதம்பரம் சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏக்களான பண்ருட்டி சத்யா, சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன், விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் அமைச்சர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்தது பரபரப்பை கிளப்பியது.
நமக்கு ஆதாயம் தேவை
ஒவ்வொரு பகுதி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் கோஷ்டி சேர்ந்து கொண்டு ஆதாயம் அடைய முயற்சித்து வருகின்றனர். அதேபோல் வடமாவட்டத்தைச் சேர்ந்த நாமும் ஏன் செயல்படக் கூடாது என்பதுதான் புறக்கணித்த எம்பி, எம்.எல்.ஏக்களின் கேள்வி.
அமைச்சரவையில் கூடுதல் இடம்
இதனால் அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தெரிவித்திருக்கின்றனர். இத்தகவலால் எடப்பாடி கோஷ்டி கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாம். அமைச்சரவையில் வடமாவட்டத்தினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பதும் இந்த புதிய கோஷ்டியின் கோரிக்கையாம்.