அடிக்கடி பறக்கும் கிளைடார், ஹெலிகாப்டர் - மகேந்திர கிரியில் நடப்பது என்ன?
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தை சுற்றி ஹெலிகாப்டர்களும், கிளைடார்களும் சுற்றி வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கிளைடார் விமானம், ஹெலிகாப்டர் பறந்து வருவதால் பொது மக்களும், அதிகாரிகளும் விபரம் தெரியாமல் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், பணகுடி அருகே மகேந்திர கிரி இஸ்ரோ மையம், விஜயநாராயணம் கடற்படை தளம் ஆகியவை பாதுகாப்பு வாய்ந்த இடங்களாக உள்ளன.
கடந்த ஆண்டு இரவு நேரத்தில் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் அருகே கிளைடார் விமானம் பறந்தது. அப்போது இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீஸார் மலைப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அதன்பின்னர் இந்த சம்பவம் சற்று ஓய்ந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் இரவு நேரத்தில் மீண்டும் கிளைடார் விமானம் பறந்துள்ளது.
சுமார் 8 முறை வட்டமடித்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் இஸ்ரோ மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அங்குள்ள டவரில் ஏறி கண்காணித்தனர். கிளைடார் பறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி இதே போல் கிளைடார் விமானம் இரவு நேரத்தில் மகேந்திர கிரி ஆய்வு மையத்தை வட்டமடித்துள்ளது. இதை பொது மக்களும், மகேந்திரியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பணகுடி காவல் நிலையத்தில் மகேந்திரகிரி சார்பில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பணகுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்த பகுதியில் அடிக்கடி கிளைடார், ஹெலிகாப்டர் பறப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.