மெரினா கடற்கரை மணலையும் தொட்டது ஆயில் லீக்கேஜ் படலம்
மெரினா கடற்கரை மணலிலும் கச்சா எண்ணெய் கசிவு படிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை: மெரினா கடற்பகுதியிலும் கச்சா எண்ணெய் கசிவு படலம் பரவியுள்ளது. 144 தடை ஆணை காரணமாக கூட்டம் இல்லாததால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாவிட்டாலும் பெரும் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28ஆம் தேதி எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் உட்பட 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பல்களும் சேதமடைந்தன.
கடலில் கலந்த கச்சா எண்ணெய்
இதில் எண்ணெய் ஏற்றி சென்ற கப்பலில் இருந்த பல்லாயிரம் லிட்டர் எண்ணெய் முழுவதும் வெளியாகி கடற்பரப்பில் பரவியது. அந்த எண்ணெய் படலம் எண்ணூர், மெரினா என திருவான்மியூர் வரை பரவியுள்ளது.
பக்கெட் கொண்டு அகற்றும் பணியாளர்கள்
இதனால் ஏராளமான மீன்கள், ஆமைகள் செத்து கடலோரம் ஒதுங்கியுள்ளன.
நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாததால் பணியாளர்கள் ஒரு அடி உயரத்துக்கு படிந்துள்ள எண்ணை படலத்தை பக்கெட் கொண்டே அகற்றி வருகின்றனர். இதன்காரணமாக எண்ணெய் படலத்தை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மெரினாவையும் தொட்டது
எண்ணெய் படலம் தற்போது மெரினாவிலும் பரவியுள்ளது. மெரினா மணற் பரப்பு முழுவதும் எண்ணெய் படலம் பரந்து படிந்துள்ளது. மணற்பரப்பு முழுவதும் ஆங்காங்கே தார் போல கச்சா எண்ணெய் படிந்துள்ளது.
மெரினாவில் 144 தடை ஆணை
தற்போது மெரினாவில் 144 தடை ஆணை அமலில் உள்ளதால் பார்வையாளர்கள், பொதுமக்கள் இன்றி மெரினா வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கடற் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சகிக்க முடியாத துர்நாற்றம்
கச்சா எண்ணெயில் சிக்கி திணறி ஏராளமான அமைகளும் மீன்களும் உயிரிழந்துள்ளதால் அப்பகுதியில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசி வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கச்சா எண்ணெய்
இதனால் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கச்சா எண்ணெய் படலமாக காணப்படுவதால் படகுகளுடன் கடலுக்குச் செல்ல மீனவர்ககள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாக மீன்பிடித் தொழிலும் முடங்கியுள்ளது.