திருவாடானை அருகே, ஒருதலை காதலால் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை... இளைஞர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்: திருவாடானை அருகே தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அடுத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு தர்மலிங்கம் (20) என்ற மகனும், தாரணி (19) என்ற மகளும் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு பக்கத்தில் உறவினரான சேதுராமனின் மகன் குமார் (28) என்பவர் தனது அக்கா பானுமதியுடன் வசித்து வந்தார்.
சென்னையில் பணி
சென்னையில் தோல் பைகள் தைக்கும் தொழிலாளியான அவர் தாரணியை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனால் சென்னையிலிருந்து அடுத்தக்குடிக்கு குமார் அடிக்கடி வந்து செல்வார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாரணி மீதான தனது விருப்பத்தை பெற்றோரிடம் கூறியதும் அவர்களும் பெண் கேட்டு மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்றனர்.
பெற்றோர் மறுப்பு
குமாரின் விருப்பத்துக்கு தாரணியின் தாய் மகேஸ்வரி மறுப்பு தெரிவித்து விட்டனர். பின்னர் தாரணியை தனியே சந்தித்த குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தினாராம். இதுகுறித்து தாரணி தன் குடும்பத்தினரிடம் தெரிவித்தவுடன் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு திருவாடானை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மகேஸ்வரி வெளியூர் பயணம்
தாரணியின் தாய் மகேஸ்வரியும், அவரது அண்ணன் தர்மலிங்குமும் நேற்று வெளியூர் சென்றுவிட்டனர். தாரணிக்கு கல்லூரி விடுமுறை தினம் என்பதால் தனது தோழியுடன் வெளியே சென்று விட்டு மதியம் தனது உறவினர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பின்பக்கக் கதவை திறந்து வைத்துவிட்டு தாரணி நன்றாக தூங்கிவிட்டார்.
நோட்டமிட்ட குமார்
இதை நோட்டமிட்ட குமார், தாரணியின் வீட்டுக்கு வந்து டிவியின் சப்தத்தை அதிகமாக வைத்துள்ளார். டிவியின் அலறல் சப்தம் கேட்டு கண்விழித்த தாரணியை சற்றும் சுதாரிக்க விடாமல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் நிலைகுலைந்த தாரணி அங்கேயே உயிரிழந்தார்.
பொதுமக்கள் கூட்டம்
டிவியின் சப்தம் நீண்ட நேரமாக இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பூட்டியிருந்த கதவை உடைக்க முயற்சித்தனர். அதற்குள் குமாரே கதவை திறந்தார். அவரது கையில் அரிவாளையும், தாரணி ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும் பார்த்த பொதுமக்கள் திருவாடானை போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
தற்கொலை முயற்சி
தாரணி சென்ற இடத்துக்கே தானும் செல்லவுள்ளதாக தற்கொலைக்கு முயன்ற குமாரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். திருவாடானை போலீஸார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.