புகழ் பெற்ற தலைவர்கள் அலங்கரித்த இடத்தில் குற்றவாளியின் உருவப்படமா?: சீறும் முத்தரசன்
சட்டசபையில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பது தவறு என்று முத்தரசன் குறிப்பிட்டு உள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா உருவப்படத்தை சட்டசபையில் திறந்து இருப்பது தவறான முன்னுதாரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று சட்டசபையில் திறக்கப்பட்டது. இதனை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமான எதிர்த்தன.
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் வைப்பது சபைக்கே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பது தவறான முன்னுதாரணமாகும். பேரவையில் இதற்கு முன்னர் தேசப்பிதா மகாத்மா காந்தி படத்தை அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்துள்ளார்.
ராஜாஜியின் படத்தை அன்றைய பிரதமர் நேரு திறந்து வைத்துள்ளார். திருவள்ளுவர் படத்தை அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜாஹீர்உசேன் திறந்து வைத்துள்ளார். அண்ணாவின் படத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்துள்ளார்.
காமராஜர் படத்தை அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டி திறந்து வைத்துள்ளார். பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதேமில்லத் ஆகிய தலைவர்களின் படங்களை கேரள ஆளுனராக இருந்த ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் படத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார். புகழ்மிக்க தலைவர்கள் படம் அவையில் அலங்கரித்த நிலையில், குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதா படத்தை பேரவையில் திறப்பது முற்றிலும் தவறான முன்னுதாரணமாகும். அவரது படம் பேரவையில் இடம் பெறுவது ஏற்க இயலாத ஒன்றாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.