ஓ.பி.எஸ். ஒரு நல்ல வடிவேலு ரசிகர்.. எப்படின்னு சொல்லுங்க!?
அதிமுக இணைப்பு, மக்கள் நலத்திட்டம் குறித்து காலையில் ஒரு பேச்சு பேசுகின்றனர், மாலையில் ஒரு பேச்சு பேசுகின்றனர் என்று எடப்பாடி அணி குறித்து ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்: மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எடப்பாடி அரசு காலையில் நல்ல வாயிலும், மாலையில் நாற வாயிலும் பேசுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக (புரட்சித்தலைவி அம்மா அணி) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு சசிகலா மற்றும அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஜெயலலிதா நீக்கி அவர்களை கூண்டோடு வெளியேற்றினார். இந்த சம்பவத்துக்கு பின்னர் சில மாதங்கள் கழித்து தங்களுக்கு உதவியாளராக இருக்கிறேன் என்று ஜெயலலிதாவிடம் சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.
கட்சியும் வேண்டாம்
அந்த கடிதத்தில் தான் கட்சியிலும், ஆட்சியிலும் உரிமை கோரமாட்டேன் என்று சசகிலா குறிப்பிட்டிருந்தார். இதன்பேரிலேயே அவரை மட்டும் ஜெயலலிதா போயல் தோட்டத்துக்குள் அனுமதித்தார். ஜெயலலிதாவுக்கு பின்னர் யாரையும் அவர் பொதுச் செயலாளராக அடையாளம் காட்டவில்லை. கட்சியும், ஆட்சியும் வழித்தவறி செல்கிறது.
செவிடன் காதில் ஊதிய சங்கு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோருவதை முதல்வர் எடப்பாடியோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளார். தமிழகத்தில் மக்கள் நலன்களில் அக்கறையில்லாத கையாலாகாத அரசு நடந்து வருகிறது.
வடிவேல் பாணியில்
அமைச்சர்களும் காலையில் நல்ல வாயிலும், மாலையில் நாற வாயிலும் மாறி மாறி பேசி வருகின்றனர். யாரும் பொறுப்பாக பேசுவதில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தவில்லை. அவரது விருப்பமான மோட்டார் தொழிற்சாலையும் ஆந்திரத்துக்கு சென்றுவிட்டது. அப்படியிருக்கும் போது தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் எப்படி தொழில் செய்ய முன்வருவர். இதனால் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும்.
உள்ளாட்சி தேர்தலில்...
உள்ளாட்சி தேர்தலில் இந்த செயல்படாத அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகுட்டுவார்கள். எங்களின் 2 கோரிக்கை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். தற்போது நடக்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனர். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து ஆட்சி புரியாவிட்டால் மிகவிரைவில் மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.
வடிவேலு ரசிகராச்சே!
ஓ.பி.எஸ். ஒரு வடிவேலு ரசிகர். முன்பு இப்படித்தான் சசிகலா குறித்துப் பேசியபோது கூட வடிவேலு பட வசனத்தை சொல்லி கலாய்த்திருந்தார். இப்போது எடப்பாடி அமைச்சர்களை கலாய்த்துள்ளார்!