ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு... துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நாகர்கோவில்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தை பதம் பார்த்து சென்றுவிட்டது. இது சென்றாலும் சுவடுகள் செல்லாத வகையில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்திவிட்டது.
நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் , கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ரப்பர்,நெல், வாழை உள்ளிட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 39 படகுகள் கரை திரும்பவில்லை. 33 படகுகளை தேடி வருகிறோம். படகு சேதமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும். 205 படகுகளில் மீனவர்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர் என்றார் ஓபிஎஸ்.