கதிராமங்கலத்தில் தவறு செய்த போலீசாரை காப்பாற்றுகிறார் முதல்வர்.. பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு
கதிராமங்கலம் கிராமத்தில் தவறு செய்த போலீசாரை முதல்வர் பழனிச்சாமி காப்பாற்றுகிறார் என பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: கதிராமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தவறு செய்த போலீசாரை முதல்வர் பழனிச்சாமி காப்பாற்றுகிறார் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கதிராமங்கலம் கிராம மக்கள் எண்ணெய் கசிவினால் தங்கள் நிலங்கள் பாழ்பட்டதை கண்டிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்தினர்.
முதல்வருக்கு கண்டனம்
மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக அங்கு சென்று மக்களைச் சந்தித்திருந்தால் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அமைதியாகப் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை நியாயப்படுத்தும் வகையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருப்பது தவறிழைத்த அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சியாகும்.
அமைச்சர் வர வேண்டும்
கதிராமங்கலத்தில் மட்டுமல்ல தஞ்சை படுகைப் பகுதியில் பல இடங்களில் மக்களிடையே பதட்ட நிலை நிலவுகிறது. உடனடியாக அமைச்சர் ஒருவரை அப்பகுதிக்கு அனுப்பி உண்மை நிலையை கண்டறிய முதல்வர் முன்வரவேண்டும்.
போலீசாரை வெளியேற வேண்டும்
கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கதிராமங்கலத்தை முற்றுகையிட்டுள்ள காவல் படையைத் திரும்பப் பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
திட்டமிட்டப்படி போராட்டம்
இல்லையேல் ஜூலை 2ம் தேதி தஞ்சையில் கூடிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்தபடி ஜூலை 10ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் கதிராமங்கலம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.