தினகரனுடன் கை கோர்த்த கே.சி. பழனிச்சாமி.... இரட்டை இலையை முடக்க டெல்லியில் மல்லுக்கட்டு!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிச்சாமி தற்போது இரட்டை இலையை முடக்க டெல்லியில் முகாமிட்டு சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
Recommended Video

ஆளும்கட்சிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவி என்பதே கிடையாது' என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் கே.சி.பழனிசாமி.
மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அ.தி.மு.க வாக்களிக்கும்' என சர்ச்சைக்குரிய வார்த்தைகள் கூறியதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் கே.சி.பழனிசாமி. இதனை எதிர்பார்க்காத அவர், அ.தி.மு.க சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் வாங்கியுள்ளேன். அதில், சட்ட விதிகள் பரிசீலனையில் இருப்பதாகதான் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அ.தி.மு.கவின் சட்ட விதி திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. அப்படியென்றால், ஒருங்கிணைப்பாளர் என்பதே இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றுதான் அர்த்தம். என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அணிகள் இணைந்த பின்பு கட்சி நிர்வாகிகளிடம் எதுவும் விவாதிக்கவில்லை' என்றெல்லாம் கொதித்தார்.
இந்நிலையில், ' இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கோடு தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்' என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் கே.சி.பழனிசாமி. இதுகுறித்து நம்மிடம் பேசிய பழனிசாமி தரப்பினர், இரட்டை இலை தொடர்பான வழக்கை விரைந்து முடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட உள்ளது.
கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கூடாது' என இரண்டு தரப்புக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தினகரனைப் பொறுத்தவரையில், எப்படியாவது இரட்டை இலையை முடக்க வேண்டும் என நினைக்கிறார். கே.சி.பழனிசாமியின் நோக்கமும் அதுதான். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். கட்சியின் பை-லா படி பொதுச் செயலாளர் தேர்வை நடத்தி முடித்த பிறகுதான், கட்சியும் சின்னமும் வழங்கியிருக்க வேண்டும். அப்படி எதுவுமே நடக்கவில்லை. கட்சியின் விதிகளை மீறி புதிய பதவிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் பதவிகள் செல்லாது' என மனுவில் குறிப்பிட்டிருக்கிறோம்.
'இரட்டை இலையை கொடுத்த விதம் சட்டப்படி சரியானது அல்ல' என்ற இந்த வாதம், தினகரன் வழக்குக்கு கூடுதல் பலத்தைத் தர இருக்கிறது" என்றார் விரிவாக. " ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்காகப் பாடுபட்ட கட்சி நிர்வாகிகளை நீக்கும் பணியில் தீவிரம் காட்டினார் முதல்வர்.
மாநிலம் முழுவதும் இதுகுறித்த பட்டியலையும் சேகரித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது. ' கட்சியின் செயற்குழுவில் பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எந்தவித ஒப்புதலும் பெறவில்லை. அப்படியிருக்கும்போது, எங்களை யாராலும் நீக்க முடியாது' என சீனியர்கள் சிலர் பேசி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கே.சி.பழனிசாமியோடு ஒன்று சேர்ந்து நீதிமன்றம் வரையில் சென்றுள்ளனர். பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், முதல்வர் பக்கம் உள்ளனர். அப்படியிருக்கும்போது, முதல்வர் தரப்புக்குத்தான் சின்னத்தை ஒதுக்க முடியும். அந்தவகையிலேயே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக எத்தனை வழக்குகள் போட்டாலும் எடப்பாடியார்தான் வெற்றி பெறுவார்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications