சென்னையில் பாம்பன் சுவாமிகள் சமாதியை நோக்கி நடைபயணம்
சென்னை: சென்னையில் பாம்பன் சுவாமிகள் நினைவு நடைபயணம் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 27 அன்று திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து பாம்பன் சுவாமிகள் கோவில் சமாதிவிற்கு நடைபயணம் மேற்கொள்ளப்படும். இந்த நடைபயணம் மாலை 6 மணிக்கு துவங்கும் என்று இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள சென்னை 2000 + அறக்கட்டளையின் தலைவர் ஆர் ரங்கராஜ் தெருவித்துள்ளார்.
சமாதியை தரிசனம் செய்த பிறகு அருகில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் பாம்பன் சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிகளை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் சென்னை 2000 + அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.
திருப்புகழ் மதிவண்ணன் பாம்பன் சுவாமிகள் சிறப்பு சொற்பழிவை 7.15 மணிக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கலை அரங்கத்தில் நடத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வி்ரும்புவோர் 9841010821 என்ற செல்போன் எண்ணிலும், [email protected] என்ற இமெயில் முகவரியிலும் ரங்கராஜை தொடர்புக்கொள்ளலாம்.
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (1850 -1929) ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்.
தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும் சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக 1850 ஆம் ஆண்டு ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.
தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது.
அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.
1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிஷ்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுவார்:
"குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாள்தோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்"
1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார். அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.
1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார். மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.