காட்டை விட்டு வர மாட்டோம்.. அடம் பிடிக்கும் பணகுடி கிராம மக்கள்!
நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஊர் பெயர் பிரச்சனை தொடர்பாக காட்டில் குடியேறிய மக்களுடன் தாசில்தார் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. ஊர்மக்கள் பிடிவாதமாக இருப்பதால் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்டது சிதம்பரபுரம்-யாக்கோபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் இரண்டாவது வார்டில் இரு தரப்பை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். ஒரு தரப்பினர் இந்த வார்டை யாக்கோபுரம் என்றும், மற்றொரு தரப்பினர் சிதம்பரபுரம் என்றும் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் 2வது வார்டு பகுதியை சிதம்பரபுரம் என்று மாற்றி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து பிரச்சனை கிளம்பிவிட்டது. யாக்கோபுரம் பகுதியை சேர்ந்த பொதுமககள் கடந்த 11ம் தேதி காட்டில் குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். 3வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
காட்டிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அங்கேயே சமையல் செய்தும் சாப்பிட்டனர். மேலும் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக கன்னங்குளம், ஆவரைகுளம், செட்டிகுளம், புதியம்புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராதாபுரம் தாசில்தார் முருகன், பழவூர் சப் இன்ஸ்பெக்டர் ராமையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊர் பெயர் மாற்றம் செய்வதற்கான உத்தரவை கலெக்டர் திரும்ப பெற்றுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டரின் வாய்மொழி உத்தரவை ஏற்க மாட்டோம் என்றும் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதனால் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.