முல்லை பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு ஆய்வு
கம்பம்: முல்லைப் பெரியாறு அணை நிலவரத்தை துணைக் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு இன்று ஆய்வு நடத்தியது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மூவர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறது. இக்குழுவிடம் அணையின் நிலவரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க 5 பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழுவினர் இன்று ஆய்வு நடத்தினர்.
பருவ மழை காலங்களில் மாதம் 2 முறை அணை ஆய்வு செய்யப்படும். ஆனால் பருவ மழை குறைவால் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதிக்கு பிறகு துணைக் குழுவினர் ஆய்வுப் பணி மேற்கொள்ளவில்லை.
தற்போது அணைப்பகுதியில் மழை தொடர்வதால் அணையை ஆய்வு செய்ய மூவர் கண்காணிப்பு குழு தலைவர் நாதன் உத்தரவிட்டிருந்தார்.
அணையின் நீர்மட்டம், நீர் வரத்து, மழைப்பதிவு, கசிவு நீர் வெளியேற்றம் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் கண்காணிப்புக் குழுவிடம் அளிக்கப்படும்.