நெல்லை பாபநாசம் கோவில் குளத்தில் கிலோ கணக்கில் குவிந்து கிடக்கும் துணிகள்
நெல்லை: நெல்லை பாபநாசம் கோவில் குளத்தில் பக்தர்கள் குளிக்கும் போது விட்டுச் சென்ற 5 ஆயிரம் கிலோ துணிகள் குவிந்து கிடக்கின்றது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா மிகவும் பிரபலம். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் குளத்தில் குளிக்கும் போது தங்களது பழைய ஆடைகளை அப்படியே விட்டு விட்டு வந்தால் தங்களது பாவமும் அப்படியே கழிந்துவிடும் என நம்புகின்றனர்.
அதே போல கோவிலுக்கு வரும் அனைத்து நாட்களிலும் இதே போல ஆடைகளை விட்டு விட்டு செல்லும் போக்கு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை சுமார் 5 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட துணிகள் அங்கு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இப்படி கழற்றிவிடப்பட்ட துணிக்குவியல் சேற்றில் கலப்பதால் பக்தர்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும், தோல் வியாதிகளும் பரவி வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, இனி கோவில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் துணிகளை போடுவதற்கென தனியாக இடம் ஒதுக்கி முள்வேலிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மீறி துணிகளை குளத்தில் போடுபவர்களுக்கு நூறு ரூபாய் அபராதமும் அதற்கு காரணமான குருக்களுக்கு ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்க நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.