கூவத்தில் இருப்பது உரமல்ல விஷம்: பார்த்திபனுக்கு விஞ்ஞானி பதில்
சென்னை: கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை எடுத்து உரமாக பயன்படுத்தினால் ஆறு சுத்தமாகும் என்று சில தினங்களுக்கு முன்னர் ஐடியா கொடுத்தார் நடிகர் பார்த்திபன். ஆனால் கூவம் ஆற்றில் இருப்பது உரமல்ல... தொழிற்சாலை கழிவுகளின் விஷம் என்று எச்சரித்துள்ளார் விஞ்ஞானி ஒருவர்.
நடிகர் பார்த்திபன் சென்னையை விட்டு மரக்காணத்தில் குடியேறிவிட்டார். இதற்கான காரணத்தையும் மய்யம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கூறினார். வாழ்க்கை அழகாக இருக்கவேண்டுமானால், நல்ல நண்பர்கள் வேண்டும். எனக்கு இயற்கை சூழலில் வாழவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தற்போது சென்னையில் நான் வசிக்கவில்லை. நான் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரக்காணம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வீடு கட்டி, அங்கேயே வசிக்கிறேன்.
கிராமத்து சூழலில்
கிராமத்து சூழலில் பசுமையான மரங்களுக்கும் மத்தியில் வாழ்கிறேன். தற்போது நானும் மரம், செடி கொடிகளை அங்கு வளர்த்து வருகிறேன் என்றார். தொடர்ந்து பேசிய பார்த்திபன், அந்த தோட்டத்தில் மரங்களுக்கு சாணி மற்றும் மக்கிப்போன உரம் பயன்படுத்தப்படுகிறது.
கூவத்தில் இருந்து உரம்
கூவத்தை அள்ளி உரமாக கூட பயன்படுத்தலாம் என்று ஒரு விவசாயி என்னிடம் சொன்னார். அது நல்ல யோசனையாக பட்டது. ஒரு லாரி கொண்டுவந்து கூவம் சகதியை அள்ளிப்போய் என் தோட்டத்துக்கு உரமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொருவரும் இப்படி செய்தால் கூவத்தை சுத்தமாக்கிவிடலாம்'' என்றார்.
நல்ல யோசனை
அட இது கூட நல்ல யோசனையாக இருக்கே என்று எல்லோரும் நினைக்க, கூவத்தில் இருப்பது உரமல்ல விஷம் என்ற ‘மண்புழு விஞ்ஞானி' முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில்.
ஆபத்தான விஷம்
கூவத்தில் ஆபத்தான தொழிற்சாலை விஷங்களும் கலந்துள்ளன. இதனால்தான், கூவம் நீரில் எந்த தாவரமும் வளரவில்லை. கூவத்தைச் சுத்தம் செய்கிறோம் என்று, அதன் கழிவுகளை வயலில் கொட்டினால் நிலம் கெட்டுப் போய்விடும்.
நிலம் கெட்டுவிடும்
இப்போது உள்ள சூழ்நிலையில் கூவத்தில் உள்ள நீரை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகு முறையாகச் சுத்திகரித்த பிறகே கழிவுகளையும், நீரையும் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மீது உள்ள ஆர்வத்தில், கூவத்தில் உள்ள கழிவுகளை யாரும் வயலுக்குக் கொண்டு சென்று பயன்படுத்த வேண்டாம்'' என்று விஞ்ஞானி கூறியுள்ளார்.
அப்போ கூவத்தில் இருப்பது உரமில்லையா? விஷம்தானோ?