மழைநீரை வேடிக்கை பார்க்கப் போய் விபரீதத்தை தேடிக்கொள்ளாதீர் மக்களே!
வாரவிடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மழைநீர் சூழ்ந்த பகுதிகளை பார்க்கச்சென்று விபரீதத்தை தேடிக் கொள்ள வேண்டாம்.
Recommended Video
சென்னை : வடகிழக்குப் பருவமழை இரவில் மட்டும் தீவிரமாக கொட்டி வருவதால் சென்னையில் மிதந்து கொண்டிருக்கும் புறநகர்ப் பகுதிகள் மேலும் மிதக்கின்றன. வாரவிடுமுறை என்பதால் வேடிக்கை பார்க்கச் சென்று விபரீதத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னையில் கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் பகலில் பிச்சுவாங்கிய மழை, நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் இரவில் பின்னிப் பெடலெடுக்கிறது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகள் வீட்டிலேயே பெற்றோரை நச்சரித்து வருகின்றனர்.
சுற்றுலாத் தலம் போல
இந்நிலையில் இன்று பெற்றோருக்கும் வார விடுமுறை என்பதால் மழை நீர் தேங்கி இருக்கும் ஸ்பாட்டுகளுக்கு குழந்தைகளை விசிட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை முதல் மழையும் ஓய்ந்துள்ள நிலையில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் பெற்றோரே ஜாக்கிரதையாக இருங்கள்.
மின்சார வயர் அறுந்து கிடக்கலாம்
மழை நீரை வேடிக்கை பார்க்கச் செல்லும் இடத்தில் விபரீதங்களுக்கு பஞ்சமிருக்காது. ஏரிகளின் கரைகள் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதே போன்று மேம்பாலங்களின் தடுப்புச் சுவர்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியான விஷயம் தான். மற்றொரு புறம் மழை நீரில் மின்சார வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு இருக்கிறது.
கரையும் கடலாக காட்சி தரும் மெரீனா
மேலும் வழக்கமான பொழுதுபோக்கு இடமான மெரினாவில் கனமழையால் கடற்கரைக்கு முன்னரே ஒரு கடல் உருவாகியுள்ளது. இதனை கொண்டாடுவதற்காக செல்லும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். பல இடங்களில் சாலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருக்கிறது.
சாலையில் பள்ளம் கவனம்
ஒரு வேளை சாலையில் பள்ளங்கள் இருந்தால் சில நிமிடங்கள் செலவிட்டு அந்த இடத்தில் அபாயத்தை குறிக்கும் ஏதேனும் ஒரு அறிகுறிகளை செய்துவிட்டு செல்லலாம். இதே போன்று உற்சாகம் அல்லது பயத்தின் மிகுதியால் செல்போனில் பலர் செல்பி மற்றும் வீடியோ எடுக்க நினைப்பர். அப்படி செய்யும் போது நம்முடன் வந்தவர்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வீண் அசம்பாவிதம் தவிர்ப்போம்
மழை நீரால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் ஒரு புறம் என்றால் தானாக விபரீதத்தை தேடிக் கொள்பவர்கள் முன்எச்சரிக்கையோடு அவற்றை தவிர்க்க வேண்டும். வீணாண அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்காமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே மக்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கையாக உள்ளது.