தமிழக கோவில்களில் மகா சிவராத்திரி கோலாகலம்... 4 கால பூஜைகளிலும் பங்கேற்று பக்தர்கள் சிவ தரிசனம்
சென்னை: சென்னை உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் 4 கால பூஜையோடு மகா சிவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேவர்களை காக்க ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டபோது, அன்றைய தினம் இரவு முழுவதும் தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்த நிகழ்வாகவும், பார்வதி தேவிக்கு சிவபெருமான் உபதேசம் வழங்கிய நாளாகவும் ‘சிவராத்திரி' குறித்து பல புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் நாமும் இரவு முழுவதும் விழித்திருந்து சிவ தரிசனம் மேற்கொண்டால் நல்லது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிறப்பு பூஜைகள்...
அதன்படி, மகா சிவராத்திரியான நேற்று சென்னை உட்பட தமிழகத்திலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோவில்களில் நடைபெற்ற 4 கால பூஜைகளிலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அபிஷேகம்...
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்பதால் பலரும் தங்கள் கைகளாலே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். கோவிலில் தனியாக அமைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பக்தர்களே வில்வம் இலையுடன், பால் அபிஷேகம் செய்து, பக்தியுடன் வணங்கினர்.
பக்தர்கள் கூட்டம்...
சிவன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சிவனை தரிசனம் செய்தனர். மாலையில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
சென்னை கோவில்களில்...
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், தியாகராயநகரில் உள்ள சிவ-விஷ்ணு கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அன்பளிப்பு...
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிவ அன்பர்கள் ஞானசம்பந்தரின் கோளறு பதிகம்., லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற்புராணம், பெரியபுராணம் புத்தகத்தை வழங்கினர்.
வில்வ இலை பூஜை...
பக்தர்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி, இறைவனுடன் ஐக்கியமாகும் நிகழ்வாக சிவராத்திரி நாளைப் பார்க்கின்றனர். வில்வத்தை அர்ப்பணம் செய்வதன் மூலம் மூன்று ஜென்ம பாவங்கள் கழியும் என்பதும், மகாசிவராத்திரியன்று லிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூஜித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூஜித்ததற்கு சமம் என்பதும் ஆன்றோர் வாக்கு.
இரவு முழுவதும் கண் விழித்து...
சிவபெருமான் சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு நாழிகை லிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறை நாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும் என்பது சிவாச்சாரியார்களின் வாக்கு.