மீண்டும் ‘புலி’ அட்டூழியம்... செங்கோட்டை அருகே மாட்டைக் கடித்துக் குதறியது... மக்கள் பீதி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே தோப்பிற்குள் புகுந்த புலி மாட்டை கடித்து குதறியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவர்சோலை பகுதியில் மனிதர்களை மிரட்டி வந்த 10 வயதான ஆண் புலி கடந்த சனிக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டது.
முன்னதாக இந்தப் புலி வடநாட்டுத் தொழிலாளி ஒருவரைக் கடித்துக் கொன்றதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினர். புலி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், செங்கோட்டை பகுதியில் தற்போது புலி நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் உள்ளது ஸ்ரீமூலபேரி அணை. இந்த அணைக்கு அருகே உக்கணம் பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புளியரையை சேர்ந்த செந்தூர்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இதில் மா,தென்னை, வாழை உள்ளிட்டவையும் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல், நேற்று காலை 7மணிக்கு தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார் செந்தூர்பாண்டியன். அப்போது அங்கு புதர் ஒன்றின் அருகே புலி ஓன்று மாட்டை கடித்து குதறியபடி இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது தொடர்பாக ஊர்மக்களிடம் அவர் தெரிவித்தார். வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியரை கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் மற்றும் வனத்துறையினர், பிளாஸ்ட் ஆப் பாரிஸ் உதவியுடன் அப்பகுதியில் இருந்த காலடித் தடங்களை ஆய்வு செய்தனர். அதில், மாட்டை கடித்து குதறியது புலிதான் என்பது உறுதியானது.
இந்த சம்பவம் குறித்து புலியை நேரில் பார்த்த செந்தூர்பாண்டியண் கூறுகையில், ‘தினமும் காலையில் தோப்பிற்க்கு வந்து சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை சுமார் 7 மணிக்கு தோப்பிற்க்கு சென்றேன். அப்போது புலி ஓன்று அருகிலுள்ள மோகன கிருஷ்ணன் என்பவரது தோப்பில் உள்ள மாட்டு பண்ணையில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஓன்றை கடித்து இழுத்து வந்து குதறி நெஞ்சு பகுதியை மட்டும் தனியாக குதறியபடி நின்றது.
இதைக் கண்ட நான் சப்தம் போடவே அது எனது தோப்பு வழியாக காட்டுக்குள் ஓடியது . இதனை பார்த்து நான் மிகவும் பயந்துபோய் இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் வனத்துரையிடமும் நேராக சென்று புகார் அளித்தேன்.
இந்த பகுதிகளில் காட்டு விலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடையில் காட்டுக்குள் உள்ள நீர் நிலைகள் வறண்டு விட்டதால் உணவுக்காகவும், நீருக்காகவும் காட்டு விலங்குகள், ஊருக்குள் வந்து அவ்வவ்போது சேதப்படுத்திவிட்டு செல்கிறது.
இதுகுறித்து எத்தனை முறை புகார் அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இங்கு உள்ள மின் வேலியும் பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை கேள்வி குறியாகி உள்ளது. இதுவரையில் விளை நிலங்களுக்கு மட்டும் பாதுகாப்பில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது இந்த பகுதியில் வாழும் மக்களது உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது" என்றார்.
கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும், காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க மின் வேலிகள் அமைக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளாகும்.
புலி நடமாட்டம் காரணமாக இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.