கண்டு கொள்ளாத அரசு: நெல்லை அருகே அணையை சீரமைத்த மக்கள்
நெல்லை: நெல்லை அருகே சேதம் அடைந்த தமிழாக்குறிச்சி அணையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் அதனை பொதுமக்களே சீரமைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக களக்காடு பச்சையாறு அணை நிரம்பி வழிந்தது. வெள்ள நீர் தடுப்பு கால்வாய் பகுதிக்கு வந்ததால் அங்கு உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக வெள்ள நீ்ர் வெளியேறியது. இதனால் திடியூர் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
திடியூர் கால்வாய் வழியே தண்ணீர் வெளியேற தமிழாக்குறிச்சி அணையில் காணப்படும் உடைப்பே முக்கிய காரணமாகும். பல ஆண்டுகளாக இந்த அணையை சீரமைக்க பொதுப்பணித்துறை முன்வரவில்லை. இதனால் தண்ணீர் வீணாக தருவை தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் தமிழாக்குறிச்சி கிராமத்திற்கு தண்ணீர் செல்லாததால் சுற்று வட்டார பகுதியில் சுமார் பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகிவிட்டன.
இந்நிலையில் தமிழாக்குறிச்சி அணையை சீரமைக்க பொதுமக்களே நிதி திரட்டினர். 200 டிராக்டர்களில் மணல் கொண்டு வந்து அணை பகுதியில் கொட்டினர்.
மண்வெட்டி, ஜேசிபி இயந்திரத்துடன் களத்தில் குதித்த விவசாயிகள் வெள்ள நீர் வெளியேற முடியாத அளவுக்கு அணை கட்டு மேவாத அளவுக்கு மண் போட்டு சரி செய்தனர். தண்ணீர் வெளியேறாத அளவுக்கு தற்காலிக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தமிழக அரசு செய்ய வேண்டிய பணியை பொதுமக்களே நிதி திரட்டி செய்த காரியம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.