பஸ் ஸ்டிரைக் எதிரொலி - ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம்.... திணறும் ரயில்வே பணியாளர்கள்
நெல்லை: தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் எதிரொலியாக ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. இதனால் ரயில்வே பணியாளர்கள் திணறிப் போய் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய நகரங்களுக்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்க பணியாளர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 29 ஆம் தேதி ஸ்டிரைக் என அறிவித்திருந்த போதிலும் இதற்கு ஒரு நாள் முன்னதாகவே பணியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் இயக்கப்படும் பஸ் மீது கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரயில் சேவைக்கு மாறியுள்ளனர்.
இதனால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மாலை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. வழக்கமாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் கூட்டம் அதிகமாக காணப்படும்.
ஆனால் மாலை நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பயணிகள் கூட்ட நெரிசலில் முண்டியத்து கொண்டு ரயிலில் இடம் பிடிக்க ஏறியதால் ரயில்வே பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து போய் கையை பிசைந்தனர்.
நெல்லையிலிருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில், செங்கோட்டை புறப்பட்ட பாசஞ்சர் ரயில்களில் அதிக கூட்டத்தை காண முடிந்தது. இதனால் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் அலைமோதியது.
இந்த கூட்டம் காரணமாக ரயில்வே நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பயணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டனர். இந்த பஸ் போராட்டம் இன்னும் இரண்டு நாட்கள் நீடித்தால் நிலைமை மோசமாகி விடும் என பல பயணிகள் வருத்ததுடன் பேசி கொள்கின்றனர்.