அமைச்சர் பதவி கேட்டு அடம்... எடப்பாடியுடன் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் சந்திப்பு
அமைச்சர் பதவி கோரி எடப்பாடி பழனிச்சாமியை பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் இன்று சந்தித்து பேசினார்.
சென்னை: அமைச்சர் பதவி தரக் கோரி முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பதற்காக பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் இன்று சந்தித்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகஇரு அணிகளாக பிளவுபட்டது. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று பன்னீர் செல்வம் அணி. இந்நிலையில் சசிகலா முதல்வராவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த போது எம்எல்ஏ-க்களை ஓபிஎஸ் அணியினரோ , எதிர்க்கட்சியினரோ விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்ற பீதியில் சசிகலா இருந்தார்.
அப்போது 122 எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் சிறைக்காவலில் வைத்து விட்டார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களுக்கு பணம், தங்கம், கார் உள்ளிட்ட கனவிலும் கிடைக்காத பரிசு பொருள்கள் கிடைக்கும் என்று பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.
பேரம் என்னாச்சு
இந்நிலையில் வாக்குறுதி அளித்ததாக கூறப்படும் சசிகலாவும், தினகரனும் சிறையில் உள்ளனர். மேலும் கூவத்தூரில் அமைச்சர் பதவியும் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் சிறைக்கு சென்றுவிட்டதாக கூவத்தூரில் பேசப்பட்ட பேரங்கள் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
ரகசிய கூட்டம்
இந்த பேரம் குறித்து தனித்தனி கோஷ்டிகளாக எம்எல்ஏ-க்கள் ரகசியக் கூட்டங்களை நடத்தி வந்தனர். அதில் தங்களுக்கு உறுதியளித்தது போல் அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பதால் போர்க் கொடி உயர்த்திய எம்எல்ஏ- க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகின்றனர்
தோப்பு கோஷ்டிக்கு அழைப்பு
கடந்த 2 தினங்களுக்கு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் சில எம்எல்ஏ-க்கள் அழைப்பின்பேரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது அவரிடம் ஆலோசனை நடத்தினர். இதற்கு அடுத்த நாளே 15 எம்எல்ஏ-க்கள் முதல்வரை சந்தித்தனர்.
தமிழ்செல்வன் சந்திப்பு
இந்நிலையில் அமைச்சர் பதவி கேட்டு தமிழ்ச் செல்வன் தலைமையில் போர் கொடி உயர்த்திய எம்எல்ஏ-க்களை அமைச்சர் செங்கோட்டையன் சமாதானப்படுத்தினார். எனினும் சமாதான ஆகாத நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்ச்செல்வன் சந்தித்தார். அமைச்சரவை மாற்றத்தில் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.