பெருமாள் முருகனை சென்னை கல்லூரிக்கு மாற்றக்கோரி வழக்கு- தமிழக அரசுக்கு நோட்டீஸ்!!
சென்னை: மாதொருபாகன் நாவலை எழுதிய பேராசிரியர் பெருமாள் முருகனை சென்னை கல்லூரிக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் பொதுச் செயலாளர் பாலமுருகன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பெருமாள் முருகன், மாதொருபாகன் என்ற பெயரில் நாவல் எழுதினார். இதில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்களை எதிர்த்து, திருச்செங்கோடு மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி, பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து, அவர் எழுதிய நாவலை திரும்பப்பெறுவதாக அறிவிக்க வைத்தார்கள்.
இதுசம்பந்தமாக, பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் பெருமாள் முருகனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.
மேலும் பெருமாள் முருகனின் மனைவி எழிலரசி, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எனவே இருவரது பாதுகாப்பான வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும் தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்கள்.
மேலும், மாதொருபாகன் நாவல் தொடர்பான வழக்கு ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்கோடு இந்த வழக்கை வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவில் கூறியுள்ளனர்.