அரசு அலுவலகங்களில் இருந்து ஜெ. போட்டோக்களை நீக்க கோரி மனு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
ஊழல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா போட்டோக்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு மார்ச் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சென்னை: ஊழல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா போட்டோக்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்க கோரி, ஹைகோர்ட்டில் 3 தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் தலைவர் சி.குமரன் சார்பில் ஹைகோர்ட்டில், தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், "சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ம் தேதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரது பெயரை மட்டும் நீக்குவதாக கூறியுள்ளது.
முதல்வர் பதவியில் இருப்பவர்களே இதுபோன்ற ஊழல் குற்றத்தில் ஈடுபடும் போது, அவருக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளையும் ஊழல் செய்ய தூண்டுவது போல் உள்ளது. ஊழல்வாதியான மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்ததால் தான், (முன்னாள்) தமிழக தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்கு அனுமதி அளித்தால், ஊழல்வாதிகளின் புகைப்படங்களை எல்லாம் அரசு அலுவலகங்களில் வைப்பார்கள் என்ற எண்ணத்துடன் அரசு உயர் அதிகாரிகளும் ஊழல் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி ஆவார். அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிமிழக அரசு விரைவில் முடக்கப் போகிறது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியை அரசு செலவில் நினைவு சின்னமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சமுதாய நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் சமாதியைத் தான், நினைவு இடமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் காமராஜர், அண்ணா, பெரியார் ஆகியோரது இடங்கள் நினைவு இல்லங்களாக உள்ளன. முதல்வராக பதவி வகித்த காமராஜர் மறைவின்போது, அவரிடம் வெறும் ரூ.300 மட்டுமே இருந்தது. அவர் பெயரில் வேறு எந்த சொத்துக்களும் இல்லை. அதனால், அவர்களது நினைவிடங்கள் பொது மக்களால் போற்றப்படுகின்றன.
ஆனால், ஜெயலலிதா நாட்டிற்காக சிறை செல்லவில்லை. அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவரது நினைவகத்துக்கு அரசு செலவில் நிதி ஓதுக்கீடு செய்து, பராமரித்தால், அது தவறான எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். தண்டனை குற்றவாளியை கவுரவிக்க அரசுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. எனவே, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவகத்தை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும் அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறினார்கள்.
இதனிடையே திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சார்பில், ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகளில், இலவச லேப்டாப்புகளில் மற்றும் அரசு நலத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் தரப்பு வக்கீல் வில்சன் தெரிவித்தார்.
பாமகவை சேர்ந்த வக்கீல் கே.பாலுவும் ஆஜராகி, ஜெயலலிதாவின் புகைப்படம் அரசு திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று வழக்கு தொடர உள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார்கள்.
அதேபோல பிற்பகல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மாநில அரசு (தலைமைச் செயலர்) இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவிட்டது. மார்ச் 20ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நோட்டீசுக்கு தமிழக அரசு எந்த மாதிரி பதில் அளிக்கப்போகிறது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.