நண்பர்களிடம் பந்தா காட்ட அதி வேகமாக கார் ஓட்டிய +1 மாணவர்.. டீ கடை மாஸ்டர் பலி!
பிளஸ் 1 மாணவன் கார் மோதி டீ மாஸ்டர் உயிரிழந்தார்.
திருவள்ளூர்: பிளஸ் ஒன் மாணவன் காரை ஓட்டியதில் டீ கடை மாஸ்வர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கன்னியப்பன் நகரை சேர்ந்தவர் லட்சுமிபதி. 55 வயதான இவர் திருவள்ளூரில் டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
சுருண்டு விழுந்து பலி
நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு, பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஊத்துக்கோட்டை சாலையில் பைபாஸ் அருகே சென்றபோது, மின்னல் போல ஒரு கார் வேகமாக வந்து பைக்கில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமிபதி சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
தகவலறிந்து திருவள்ளூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தியது பிளஸ் ஒன் மாணவன் என தெரியவந்துள்ளது. மணவாளநகர் பகுதியை சேர்ந்த இந்த மாணவர், தனது நண்பர்கள் 2 பேரை கூட காரில் உட்கார வைத்து ஓட்டியுள்ளார்.
மூவரும் எஸ்கேப்
இரவு நேரம் என்பதாலும் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காகவும் அதிவேகமாக காரை ஓட்டி காட்டியுள்ளார். விபத்து நடந்தது தெரிந்ததும் காரில் இருந்த 3 பேருமே எஸ்கேப்!! இப்போது இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாணவனை விடுவிப்பதா?
18 வயதுக்குட்பட்டோர்கள் கைப் ஓட்டுவதையே சட்டப்படி குற்றம் என்கிறோம். அப்படி இருக்கும்போது, பிளஸ் 1 மாணவன் காரை ஓட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. 16 வயசு பையனிடம் காரை கொடுத்து அனுப்பி இருக்கிறார்களே, அந்த பெற்றோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். வீட்டு பிள்ளைகளிடம் எதில் எதில் தங்களது செல்லத்தை காட்ட வேண்டும் என்றில்லையா? இந்த மாணவனின் தந்தை ஒரு தொழிலதிபராம். எனவே மாணவரை விடுவிக்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.