மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராஜாஜி ஹாலுக்கு வந்த பிரதமர் மோடி கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், மகள் கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு மோடி ஆறுதல் கூறினார். பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
அவர்களை தொடர்ந்து பகல் 12.35 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 12.45 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்த வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி ஆகியோர் 12.40 மணிக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2:20க்கு சென்னை வருகிறார்.
கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா ஆகியோர் 1.30 மணிக்கு வருகின்றனர்.