பாமகவில் தொடரும் கலகம்.. அன்புமணிக்கு எதிராக மாஜி எம்.எல்.ஏ. ரவிராஜ் போர்க்கொடி!
பாமகவில் காடுவெட்டி குரு ஓரம்கட்டப்பட்டதைத் தொடர்ந்து திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை: பாமகவில் காடுவெட்டி ஓரம்கட்டப்பட்ட நிலையில் திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவின் முகமாக ராமதாஸும் தாமும் மட்டுமே இருக்க வேண்டும் என செயல்படுகிறார் அன்புமணி. இதனாலேயே காடுவெட்டி குரு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
காடுவெட்டி குருவும் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் வன்னியர் சங்கத்தின் தலைவர் என்பதால் அதன் பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என கூறி வருகின்றனர்.
ரவிராஜ் விலகல்
இந்நிலையில் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் திடீரென தாம் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார். ரவிராஜ், மலரும் தமிழகம் என்ற பெயரில் சேவை அமைப்பை நடத்தி வருகிறார்.
மக்கள் டிவி
அதேபோல் பாமகவின் மக்கள் டிவியில் ரவிராஜ் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து ரவிராஜை அழைத்த அன்புமணி, நிகழ்ச்சியை நிறுத்திவிடுங்கள் என கூறியுள்ளார்.
அன்புமணி உத்தரவுக்கு எதிர்ப்பு
அத்துடன் மலரும் தமிழகம் என்ற அமைப்பையும் கலைத்துவிட வேண்டும் என கண்டிப்புடன் கூறியிருக்கிறார். ஆனால் இதை ரவிராஜ் ஏற்க மறுத்துவிட்டார். மக்கள் டிவி நிகழ்ச்சியை நீங்களே நிறுத்திவிடுங்கள்... அதற்காக மலரும் தமிழகம் அமைப்பை கலைக்க முடியாது என சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
ராஜினாமா
பின்னர் பாமகவில் இருந்து தாம் விலகுவதாக ஒரு கடிதம் ஒன்றையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் ரவிராஜ். காடுவெட்டி குரு, ரவிராஜ் என அடுத்தடுத்து ஒதுங்குவதால் பாமகவில் விரைவில் கலகம் வெடிக்கும் என்றே கூறப்படுகிறது.