ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுமி.. நில உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், நிலத்தின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி மலர்கொடி மகள் தேவி (4). மலர்கொடி நேற்று காலை 7 மணியளவில் தனது நிலத்தில் பயிடப்பட்டிருந்த வேர்க்கடலையை பறிக்க சிறுமி தேவியுடன் சென்றார். அங்கு சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து நிலமான சங்கர் என்பவரின் தோட்டத்தில் போடப்பட்டிருந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுமி தவறி விழுந்தாள். அலறல் சத்தம் கேட்டு மலர்கொடி அங்கு ஓடி வந்தார்.
தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றில் சுமார் 30 அடி பள்ளத்தில் சிறுமி இடையில் சிக்கி கொண்டாள்.
சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தி மீட்கும் பணி துரிதமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. தொடர்ந்து மீட்பு குழுவினர் சிறுமியை உயிருடன் மீட்க போராடி வந்தனர். மாலை 6.15 மணியளவில் சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். இதனால் சிறுமியின் தாய், உறவினர்கள், அதிகாரிகள் மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், சிறுமி மயக்க நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தவாறே வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர் குழுவினர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். டாக்டர்களின் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
11 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டும் காப்பாற்ற முடியவில்லையே என்று கலெக்டர்கள் ஞானசேகரன் (திருவண்ணாமலை), சங்கர்(வேலூர்), போலீஸ் எஸ்.பிக்கள் முத்தரசி, விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் குழந்தையை மீட்ட மீட்பு குழுவினர் மிகவும் வேதனையடைந்தனர்.
குழந்தை இறந்த தகவல் கேட்டதும் தாய் மலர்கொடி மற்றும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் அழுது புரண்டனர். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. தகவலறிந்த அமைச்சர் கே.சி.வீரமணி மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூறினார்.
சிறுமியின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு இன்று காலை 9 மணிக்கு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியின் உடல் அவரது சொந்த ஊரான புலவன்பாடியில் அடக்கம் செய்யப்படுகிறது. குழந்தை இறந்ததால் புலவன்பாடி கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமி இறந்தது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிலத்தின் உரிமையாளர் சங்கரை கைது செய்தனர்.
அங்கு போர்வெல் போட்ட அதன் உரிமையாளர் தினகரன், மேலாளர் பலராமன் ஆகியோரையும் கைது செய்தனர். தற்போது இவர்கள் மீது கவனக்குறைவாக நடந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.