நெடுவாசல் போராட்ட களத்திற்குச் சென்ற 7 மாணவர்கள் குளித்தலையில் கைது
நெடுவாசல் போராட்டக்களத்திற்குச் சென்ற 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர்: நெடுவாசல் போராட்ட களத்திற்கு கரூர் குளித்தலையில் இருந்து சென்ற மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டச் சென்றதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று கோரி கடந்த மார்ச் மாதம் 22 நாட்கள் நெடுவாசலில் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பனை எதிர்த்தும் நெடுவாசலில் புதன் கிழமை காலை இளைஞர்களும், பெண்களும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீசார் எவ்வளவோ தடுத்தும் மீறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
புதன் கிழமை தொடங்கிய இந்தப் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் 70 கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் என ஒவ்வொன்றாக தொடர உள்ளனர் நெடுவாசல் கிராம மக்கள்.
நெடுவாசலில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புகள் என அனைத்து தரப்பில் இருந்து ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே இன்று மாலை இந்த போராட்டத்தில் பங்கேற்க கரூர் குளித்தலையில் இருந்து சென்ற 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டச்சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களின் இருவர் மருத்துவம் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.