காரில் கட்டுகட்டாக பணம்: தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
நெல்லை: கோவையில் சிக்கியது ஹவாலா பணம் என்று தகவல் தெரிவிப்பதால் தமிழக எல்லையில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணி செய்து வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற ஒரு சொகுசு கார் கோவையில் விபத்துக்கு உள்ளானது. அதன் ரகசிய அறைகளில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அது ஹவாலா பணமாக இருக்கும் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தம் 2 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 800 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அவருக்கு இந்த பணம் எப்படி வந்தது என கணக்கு கேட்டபோது அவரிடம் சரியான பதில் இல்லை. இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலின் கைவரிசை இருக்கலாம் என கூறப்படுவதால் இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக மணல், சல்லி, எரிசாராயம் ஆகியவை கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் கடத்தல் கும்பல் போலீசாரின் கண்ணீல் மண்ணை தூவி விட்டு கடத்தலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
குறிப்பாக லாரிகளில் ரகசிய அறை அமைத்து கடத்துவது, கார் மற்றும் வேன்களின் டோர்களில் ரகசிய அறை அமைத்து கடத்துவது போன்ற காரணத்தால் போலீசார் கோட்டை விடுகின்றனர். குறிப்பாக டாஷ் போர்டு, டிக்கி போன்ற இடங்களில் சோதனை போடாமல் விட்டு விடுகின்றனர். இது கடத்தலுக்கு கஷ்டம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலையில் ஹவாலா பணம் சிக்கியதை அடுத்து புளியரை செக்போஸ்ட்டில் போலீசார் கார் உள்ளிட்ட வாகனங்களில் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.