தல்லாக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை.. பணி முடிந்து வீடு திரும்பியபோது சோகம்
தல்லாக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை: தல்லாக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை சிலைமான் புளியங்குளத்தில் வசித்து வந்தவர் மும்மூர்த்தி வயது 37. இவர், தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், பணி முடிந்து நேற்றிரவு வீட்டுக்கு சென்ற மும்மூர்த்தி மிகவும் கவலை தோய்ந்தவாறே இருந்துள்ளார். இதனால் வீட்டிலுள்ளவர்கள் என்ன ஏதுவென்று விசாரித்ததற்கு ஒன்றும் இல்லை என்று மட்டும் சொல்லிவிட்டு தூங்க சென்று விட்டார்.
ஆனால் நள்ளிரவில் தனது அறையில் மும்மூர்த்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிலைமான் போலீசார் மும்மூர்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் தமிழக போலீசாரின் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சென்னையில் புளியந்தோப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர்கூட தற்கொலைக்கு இன்று காலை முயன்று, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து போலீசார் மன அழுத்தத்தின் பிடியில் சிக்கி உயிரை மாய்த்து கொள்வது அதிகரித்து வருகிறது.
இதற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைத்து, காவல் துறையை மேம்படுத்த வேண்டும். போலீசாருக்கு மன உறுதியை வளர்க்கும் பயிற்சிகளை தீவிரப்படுத்துவதுடன், வேலைப்பளுவை குறைத்து, இனிமையான புற சூழலை உருவாக்கி தர அரசு முன் வரவேண்டும். காவல் ஊழியர்களின் குடும்பம் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
சரியான எண்ணிக்கையில் ஆட்களை நியமனம் செய்து போலீசாருக்கு வேலை பளுவை குறைக்க வேண்டும். அத்துடன், மன உறுதி , சேவை மனப்பான்மை, நேர்மை நெறியை வளர்க்கும் பயிற்சியையும் அளித்து, அவர்களின் புற சூழ்நிலை இனிமையாக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களின் உரிமைகளை கேட்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். மனம் சார்ந்த பல்வேறு உடற்பயிற்சிகளை கூடுதலாக காவல்துறை பயிற்சிகளுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.